உங்கள் வீட்டு 'தம்பி' ஆவதற்கு முன் ரத்தீஷ் என்ன செய்து கொண்டிருந்தார்? முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி
உங்கள் வீட்டு 'தம்பி' ஆவதற்கு முன் ரத்தீஷ் என்ன செய்து கொண்டிருந்தார்? முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி
ADDED : மே 27, 2025 03:35 AM

சென்னை: 'மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி அல்ல. எனவே, ஊழலுக்கான தண்டனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தப்ப முடியாது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
'நானும் டில்லிக்கு போனேன். நானும் தலைவர் தான்' என, இத்தோடு ஐந்து முறை, முதல்வர் ஸ்டாலின் புலம்பி தள்ளிவிட்டார். கடந்த மூன்று ஆண்டுகள், 'நிடி ஆயோக்' கூட்டத்தை புறக்கணிக்கிறேன் என, வீடியோ வெளியிட்டு நாடகம் நடத்தினார்.
'பில்டப்'
ஆனால், இப்போது மட்டும் டில்லி சென்றது ஏன்? தமிழக 'நிதி'க்காகவா அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் 'நிதி'க்காகவா என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கான உண்மை பதில் என்ன?
ஏதோ டில்லிக்கு போய், தமிழகத்திற்கான பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கையோடு கொண்டு வந்த ரேஞ்சுக்கு, 'பில்டப்' செய்கிறீர்கள். உங்கள் குடும்பம் கொள்ளையடித்த, பல ஆயிரம் கோடி ரூபாய்களையும், அதன் பின்னணியில் உள்ள 'நிதி'களையும், அவர்களுக்கு துணையான 'தம்பி'களையும் காப்பற்றிவிடலாம் என்ற நப்பாசையில் தானே, பயந்து, நடுங்கி டில்லிக்கு ஓடோடி சென்றீர்கள். அதுவும் மண்ணோடு மண்ணாகிப் போனதாமே.
நான் தான் சொன்னேனே, மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி அல்ல. உங்கள் ஆட்சியின் ஊழலுக்கான தண்டனையில் இருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது.
'பின்னால் சட்டை கிழிந்து தொங்கினாலும், முன்னால் 'மேக்கப்' கலையாமல், 'மிஷன் சக்சஸ்' என்ற உங்கள் கூவலுக்கு பின்னால், உங்கள், 'மிஷன் பெயிலியர்' ஆன கண்ணீர் நன்றாகப் புரிகிறது; ஆழ்ந்த அனுதாபங்கள்.
எதிர்க்கட்சி தலைவராகிய நான் எங்கு, எப்படி செல்கிறேன் என்று கண்காணிக்க செலவிட்ட நேரத்தை, தங்கள் அவல ஆட்சியில் நடக்கும் குற்றங்களை தடுப்பதில் செலவிட்டு இருக்கலாம்; ஏதேனும் பயன் கிடைத்திருக்கும்.
ஊரறிந்த உண்மை
எப்போது பார்த்தாலும், 'ரெய்டுகளுக்கு பயந்து' என்று சொல்கிறீர்களே... உள்ளபடியே கேட்கிறேன், எந்த ரெய்டை பார்த்து எனக்கு பயம். இந்த ரெய்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.
நீங்கள் குறிப்பிடும் உறவினர்கள், எனக்கு உறவினராகும் முன்னரே, பல தொழில்களை செய்து வந்தவர்கள். இருமுறை வருமான வரி சோதனைகளை சந்தித்தவர்கள்.
முரண்பாடுகள் இருப்பின், முறையாக கணக்கு காட்டி, அதற்கான விளக்கத்தை அளிக்கப்போகின்றனர்.
இதில், நான் செய்வதற்கு எதுவுமே இல்லை என்பது ஊரறிந்த உண்மை. அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல், இதுபோன்ற போலி குற்றச்சாட்டுகளை அள்ளி தெளிப்பது வெட்கக்கேடானது.
மாறாக, உங்கள் வீட்டுத் 'தம்பி' ஆவதற்கு முன் ரத்தீஷ் யார், அவரிடம் என்ன சொத்து இருந்தது; என்ன தொழில் செய்தார்; எவ்வளவு லாபம் பார்த்தார்? இன்று, ரத்தீஷ் மற்றும் அவரை சார்ந்தோரின் சொத்து மதிப்பு என்ன; எத்தனை கம்பெனிகள் வைத்துள்ளனர் என்பதை நேரடியாகப் பேச, முதல்வர் ஸ்டாலின் தயாரா.
இத்தனை நாட்கள், உங்கள் அமைச்சர்கள் கதறியது போதாதென்று, இப்போது நீங்களே களத்தில் இறங்கி கதறுவதை, நான் மட்டுமல்ல, தமிழக மக்களும் ரசித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.