விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது; உதயநிதி சொல்வதை பாருங்க!
விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது; உதயநிதி சொல்வதை பாருங்க!
ADDED : அக் 21, 2024 01:32 PM

திண்டுக்கல்: 'தி.மு.க.,வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை, நீங்கள் தமிழையும், தமிழ்நாட்டையும், திராவிடத்தையும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. ஏதுவும் செய்ய முடியாது' என துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
திண்டுக்கல் திருமண விழாவில், உதயநிதி பேசியதாவது:
தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி நடந்து வருகிறது. நேரடியாக இந்தியை திணிக்க முடியாததால், தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர். புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் ஹிந்தியை உள்ளே கொண்டு வர முயற்சி செய்கின்றனர். தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சிக்கு பல பேர் துணை போகின்றனர். முதல்வர் ஸ்டாலின் செய்த செயலால், மண்ணை கவ்வி கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாடு பெயரை மாற்ற ஒருவர் முயற்சித்தார். ஆனால் தமிழ்நாடு முழுவதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மன்னிப்பு கேட்டார். தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பி உள்ளனர். தி.மு.க.,வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை, நீங்கள் தமிழையும், தமிழ்நாட்டையும், திராவிடத்தையும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. இந்தி திணிப்பை ஒரு போதும் தமிழகம் ஏற்காது. அதனை முதல்வர் ஸ்டாலினும் அனுமதிக்க மாட்டார்.
மகளிருக்கு ரூ. ஆயிரம்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த முடியாது என பலரும் கூறினார்கள். கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ், இதுவரைக்கும் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.ஆயிரம் கொடுக்கப்படுகிறது.
விடுப்பட்ட சிலருக்கும், கருணாநிதி உரிமை திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை வழங்க, முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து, வழங்குவார் என்ற உறுதிமொழியை நான் கூறுகிறேன். இவ்வாறு உதயநிதி பேசினார். இவ்வாறு உதயநிதி பேசினார்.