இலவச வேட்டி, சேலைகள் எங்கே சென்றன? அரைகுறை வினியோகத்தால் மக்கள் கேள்வி
இலவச வேட்டி, சேலைகள் எங்கே சென்றன? அரைகுறை வினியோகத்தால் மக்கள் கேள்வி
ADDED : ஜன 19, 2026 03:42 AM

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு வழங்க தேவையான, வேட்டி, சேலைகளை 100 சதவீதம் அனுப்பி விட்டதாக கைத்தறித்துறை அறிவித்துள்ளது. ஆனால், ரேஷன் கடைகளில் வேட்டி, சேலைகள் வரவில்லை என்கின்றனர். தயாரித்த வேட்டி, சேலை எங்கு சென்றன என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பொங்கல் பண்டிகையின்போது, ரேஷன் கடைகளில், அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், இலவச வேட்டி, சேலை வழங்க அரசு திட்டமிட்டது. கைத்தறித் துறை சார்பில், 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலைகள் தயாரிக்கும் பணி, கடந்த ஜூலை மாதம் துவக்கப்பட்டது. கடந்த டிசம்பரில் பணிகள் நிறைவடைந்தன.
கடந்த ஆண்டு, நுால் கொள்முதலில் தாமதம், பாலியஸ்டர் மோசடி உள்ளிட்ட காரணங்களால், வேட்டி, சேலை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக, தலா 15 லட்சம் பேருக்கு வேட்டி, சேலை வழங்கப்படவில்லை. அதுபோல் இம்முறை நடக்கக் கடாது என்பதற்காக, பொங்கலுக்கு முன், இலவச வேட்டி, சேலைகள் கூட்டுறவுத் துறைக்கு அனுப்பப்பட்டன.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் கடந்த 8ம் தேதி துவங்கியது. ஆனால், பல கடைகளில் வேட்டி, சேலைகள் முறையாக வழங்கவில்லை என புகார் எழுந்தது.
சென்னையில் பல கடைகளில், 'சேலை இல்லை; பொங்கல் முடிந்து வந்து பாருங்கள்' என, ரேஷன் ஊழியர்கள் தெரிவித்தனர்.
விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், 60 சதவீதம் பேருக்கு மட்டுமே, வேட்டி, சேலை வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'இதுவரை 1.55 கோடி வேட்டி, 1.59 கோடி சேலை வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதி வழங்க வேண்டியுள்ளது' என்றனர்.
கைத்தறித்துறை பொங்கலுக்கு முன், 100 சதவீதம் வேட்டி, சேலைகளை வழங்கிய நிலையில், ரேஷன் கடைகளுக்கு தேவையான வேட்டி, சேலைகள் அனுப்பப்படாதது ஏன் என, பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே, விடுபட்டவர்களுக்கு உடனடியாக, வேட்டி, சேலைகள் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

