தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே போனது? *அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே போனது? *அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
ADDED : பிப் 13, 2025 07:52 PM

சென்னை:'கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பாடத்திட்டத்திற்காக, தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய, 1,050 கோடி ரூபாய் எங்கே சென்றது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
பிரதமர் மோடி, குழந்தைகள் அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 2018 - 19ல், 'சமக்ர சிக் ஷா' திட்டத்தை துவக்கினார். இத்திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றான, தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்வி தொடர்பாக, சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 6ம் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தனிப்பாடமாக இடம்பெற வேண்டும்; ஒவ்வொரு பள்ளியிலும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும்.
இவற்றை அமைக்க மூலதன செலவுக்கு, 6.40 லட்சம் ரூபாய்; பாடத்தை பயிற்றுவிக்கும் பயிற்றுனருக்கு மாத ஊதியமாக, 15,000 ரூபாய் மற்றும் இதர செலவுகள் சேர்த்து ஆண்டுக்கு, 2.50 லட்சம் ரூபாயை, மத்திய அரசு வழங்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்வி பாடத்திட்டத்துக்கு, தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிதி, 1,050 கோடி ரூபாய்.
ஆனால், தமிழகத்தில் அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வைக்கப்பட்டு உள்ளது. சிறு வயதில் இருந்தே தகவல் தொழில்நுட்பத்தில் குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டும் என்ற, இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமே இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் சிதைந்துள்ளது.
தி.மு.க., அரசு, 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் செயல்பட்ட தன்னார்வலர்களை, கேரள மாநில அரசு நிறுவனமான, 'கெல்ட்ரான்' கீழ் மாதம், 11,500 ரூபாய் ஊதியத்தில், அலுவலக பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயிற்றுனர் என்ற புதிய பணியிடத்தை உருவக்கி, பணியில் அமர்த்தியுள்ளது.
தமிழகம் முழுதும் கணினி பயிற்சி பெற்ற பி.எட்., பட்டதாரிகள், 60,000 பேர் வேலைக்காக காத்திருக்கும் போது, அவர்களுக்கு பணி நியமனம் வழங்காமல், அரசு வஞ்சித்திருப்பது ஏன்?
கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடு பாட திட்டத்திற்காக, மத்திய அரசு வழங்கிய, 1,050 கோடி ரூபாய் எங்கே சென்றது?
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எத்தனை தகவல் தொழில்நுட்ப ஆய்வகங்கள் உள்ளன; ஏன் 6ம் வகுப்பில் இருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்வி, தனி பாடமாக அமைக்கப்படவில்லை? இதுகுறித்து, பள்ளி கல்வி துறை அமைச்சர், மக்களுக்கு தெளிவுபடுத்த கடமைப்பட்டு இருக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

