எங்கே செல்லும் பழனிசாமியின் பாதை: எழுச்சி பயணத்திற்கு கூடும் கூட்டம் ஓட்டுகளாகுமா
எங்கே செல்லும் பழனிசாமியின் பாதை: எழுச்சி பயணத்திற்கு கூடும் கூட்டம் ஓட்டுகளாகுமா
ADDED : செப் 07, 2025 06:54 AM

மதுரை:சட்டசபை தேர்தலை கணக்கிட்டு தமிழகத்தில் எழுச்சி பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் பேச்சை கேட்க கூடும் கூட்டம் ஓட்டுகளாக மாறும்; ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் என கட்சியினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பழனிசாமி எழுச்சி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நான்காம் கட்ட பயணத்தில் செப்.,1 முதல்மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கட்சியில் ஒற்றை தலைமை விவகாரத்தில் பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். தென்மாவட்டங்களுக்கு அ.தி.மு.க., முகமாக இருந்தவர் என்பதால், அதை ஈடுகட்ட கட்சியின் பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி மதுரையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி பிரம்மாண்ட மாநாட்டை நடத்தினார். புரட்சி தலைவர், புரட்சி தலைவி வரிசையில் பழனிசாமிக்கு 'புரட்சித் தமிழர்' பட்டம் சூட்டப்பட்டது.
அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றதன்மூலம் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தன்பக்கமே உள்ளனர் என மாநாடு வாயிலாக தொண்டர்களுக்கு பழனிசாமி உணர்த்தினார். அதேசமயம் உட்கட்சி பூசல் காரணமாக நீதிமன்றத்தில் இரட்டை இலை முடக்கம், பொதுச்செயலாளர் பதவியை பறிக்க வழக்கு தொடரப்பட்டது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஜெயலலிதா பாணியில் சட்டசபை தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பே பிரசாரத்தை 'எழுச்சி பயணமாக' தொடங்கி, தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கட்சியின் அடையாளம் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியால் உற்சாகமடைந்த இரு கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் பழனிசாமிக்கு அமோக வரவேற்பை அளித்து வருகின்றனர். அந்தந்த தொகுதிக்கு என்னென்ன தேவையே அதை தேர்தல் வாக்குறுதியாக இப்போதே பழனிசாமி சொல்லி வருவது கட்சியினரிடையே நம்பிக்கையை அளித்துள்ளது. அதேசமயம் பழனிசாமியின் பேச்சை கேட்க அனைத்து இடங்களிலும் எதிர்பாராத அளவில் பெரும் கூட்டம் கூடுகிறது.
இது அழைத்துவரப்பட்ட கூட்டம் என தி.மு.க., கூட்டணி கட்சியினர் கூறி வருகின்றனர். இதை பொருட்படுத்தாத அ.தி.மு.க.,வினர், 'பொதுமக்களும் வருகின்றனர். எல்லா கட்சிகளும்தான் பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருகின்றனர். இதற்கு நாங்களும் விதிவிலக்கல்ல. வந்தவர்கள் பெரும்பாலனோர் தொழிலாளர்கள். அவர்கள் ஒருநாள் வேலைக்கு செல்லவில்லை என்றால் சம்பளம் கிடைக்காது. அதைதான் நாங்கள் கொடுத்து போக்குவரத்து செலவை குறைக்க அழைத்து வருகிறோம்' என்கின்றனர்.
செங்கோட்டையன் நேற்றுமுன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த போது,'தென் மாவட்டங்களில் கட்சியின் நிலை உங்களுக்கு தெரியும்' என்று ஒ.பன்னீர்செல்வம் கட்சியில் இல்லாததை நினைத்து வருத்தத்துடன் கூறினார். ஆனால் அந்த அளவிற்கு தென்மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. இதனை பழனிசாமியின் சுற்றுப்பயணமும் நிரூபித்து வருகிறது.
கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியின் அடையாளமாக பழனிசாமி பார்க்கப்படுகிறார். ஜாதி ஓட்டுகள், பெண்கள் ஓட்டுகளை தாண்டி, இளைஞர்களையும் அவரது பேச்சு ஈர்த்து வருகிறது என்பது உண்மை. அவருக்கு கூடும் கூட்டம் நிச்சயம் ஓட்டுகளாக மாறும். அவரது பயணம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறினார்.