தி.மு.க., வில் சமூகநீதி எங்கே: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கேள்வி
தி.மு.க., வில் சமூகநீதி எங்கே: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கேள்வி
ADDED : மே 30, 2025 06:12 AM
மதுரை: ''மூச்சுக்கு முன்னுாறு முறை சமூகநீதி பேசும் தி.மு.க., ராஜ்யசபா தேர்தலில் மதத்தைச் சார்ந்தே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதே தவிர, இதில் சமூகநீதி எங்கே பிரதிபலிக்கிறது,'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: தி.மு.க., அறிவித்த வேட்பாளர்களில் ஒருவர் கிறிஸ்துவர், மற்றொருவர் முஸ்லிம், மற்றொருவர் ஹிந்து. வெளிப்படையாகவே முஸ்லிம் - கிறிஸ்துவ ஓட்டு வங்கியை குறி வைத்து வேட்பாளர்களை தி.மு.க., நிறுத்தியுள்ளது.
தேர்தல் நேரத்தில் தி.மு.க.,வால், கட்டவிழ்த்து விடப்படும் ஏமாற்று விளம்பரங்களுக்கு இரையாகி ஓட்டுகளை அள்ளிக்கொடுக்கும் தேவேந்திர குல வேளாளர்கள் இதுபோன்று எளிதாக வெற்றி பெற்று தங்களின் குரல் பார்லிமென்ட்டில் ஒலிக்கும் முக்கிய தருணங்களில் கைகழுவப்படுகிறார்கள். முற்றிலும் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை இனியாவது புரிந்துக்கொள்வார்களா.
வருங்காலத்தில் சமூகநீதி புரட்டல்வாதிகளுக்கு ஓட்டளிக்கக்கூடாது என்பதை தேவேந்திர குல வேளாளர்கள் சிந்திப்பார்களா. அ.தி.மு.க., தனக்கு உள்ள இருவாய்ப்புகளை யாருக்கு கொடுக்க போகிறார்கள். எப்படி சமூகநீதியை கையாளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.