கூட்டணிக்கு வர பணம் கேட்டது யார்? அ.தி.மு.க.,வுக்கு மார்க்ஸிஸ்ட் கேள்வி
கூட்டணிக்கு வர பணம் கேட்டது யார்? அ.தி.மு.க.,வுக்கு மார்க்ஸிஸ்ட் கேள்வி
ADDED : நவ 23, 2024 07:29 PM
திண்டுக்கல்:'மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி:
அதானி 2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துதான் முதலீட்டை ஏற்றார் என்பது தொடர்பாக, அதானி உட்பட ஏழு பேர் மீது, அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஏன் இவ்வளவு பெரிய முறைகேட்டை கண்டுபிடிக்கவில்லை. மத்திய அரசு, முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; அதானி கைது செய்யப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
பள்ளிகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். போதை பழக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். அ.தி.மு.க.,வில் உள்ள தலைவர்களுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடு உள்ளது. லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தோல்விக்கான காரணம், சரியான கூட்டணி இல்லாதது தான். பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு அ.தி.மு.க., போனால், அக்கட்சி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
திருச்சியில் நடந்த அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'கூட்டணிக்கு வருவோர் பணம் கேட்பர்; சீட்டு கேட்பர்' என சொல்லி இருக்கிறார். அக்கட்சியிடம் யார் பணம் கேட்டனர் என்பதை அவர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.