ADDED : மார் 19, 2024 10:47 PM
சென்னை:பிரதமர் மோடியின் சேலம் பேச்சுக்கு, பதிலடியாக டி.ஆர்.பாலு எம்.பி., வெளியிட்ட அறிக்கை:
பிரதமர் மோடி, தி.மு.க.,வின் துாக்கம் தொலைந்து விட்டது என, சேலத்தில் முழங்கி விட்டு போயிருக்கிறார். பிரதமருக்கு தான் துாக்கம் தொலைந்து விட்டது. அதனால் தான், அடிக்கடி தமிழகத்திற்கு வந்து, புலம்பி விட்டு போகிறார். மோடியின் பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க, தமிழக மக்கள் மட்டுமல்ல; இந்திய மக்கள் அனைவரும் தயாராகி விட்டனர்.
சேலம் ஆடிட்டர் ரமேஷ் குறித்து பேசி கண்ணீர் விட்டிருக்கிறார் பிரதமர் மோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தான், சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ், 2013ல் கொலை செய்யப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து இப்போது நினைவு கூறுவது ஏன்?
ஜெயலலிதா ஆட்சியில், சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை சுரேஷ், வேலுார் அரவிந்தன், வெள்ளையப்பன், சென்னை சுரேஷ் உள்ளிட்ட பா.ஜ., ஆதரவாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். அந்த ஜெயலலிதாவை தான், சேலம் கூட்டத்தில் புகழ்ந்து பேசியிருக்கிறார் பிரதமர்.
தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்றுவோம் என்கிறார். வெள்ளத்தில் சிக்கி பேரிடர் நிவாரணம் கேட்டு தமிழகம் கையேந்திய போது, ஒரு பைசாவும் தராத மோடி தான் தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்ற போகிறாராம்.
பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து மக்கள் விடுதலை பெற, இண்டியா கூட்டணிக்கு ஓட்டு அளிக்க தயாராகி விட்டனர். ஏப்., 19ம் தேதி தான் பா.ஜ., வுக்கு பேரழிவுக்கு காலம் துவங்க போகிறது.
இவ்வாறு டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

