யார் அந்த சார் ?; நீதி கிடைக்கும் வரை போராட்டம்: உறுதியாக சொல்கிறார் இ.பி.எஸ்.,
யார் அந்த சார் ?; நீதி கிடைக்கும் வரை போராட்டம்: உறுதியாக சொல்கிறார் இ.பி.எஸ்.,
ADDED : டிச 30, 2024 11:14 AM

சென்னை: அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அ.தி.மு.க.,வின் போராட்டம் தொடரும்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கு, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். நேற்று (டிச.,29) அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், 'யார் அந்த சார்?' என்ற தலைப்பில், தமிழகம் முழுதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில், இன்று (டிச.,30) சமூகவலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழகத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ள, முதல்வர் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சென்று கலந்து கொண்ட கட்சியினரை போலீசார் கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்,
மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் முதல்வர் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் திமுகவை சேர்ந்தவர், போதைப்பொருள் மாபியா வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர், என நீளும் திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணியாலும், ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களாலும், திமுக அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது.
அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அ.தி.மு.க.,வின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்? யார் அந்த சார் ? இவ்வாறு இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.