ADDED : நவ 20, 2024 12:39 AM
சென்னை:கூடைப்பந்து வீராங்கனை இறப்புக்கு, அவர் சாப்பிட்ட உணவு காரணம் அல்ல; உடல் நலப்பிரச்னையே காரணம் என்பது, பிரேத பரிசோதனை வாயிலாக தெரிய வந்துள்ளது.
கோவையை சேர்ந்த பள்ளி மாணவி எலினா, 15; குவாலியரில் நடந்த கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற பின், கடந்த 15ம் தேதி சென்னை திரும்பினார். ரயிலில் சிக்கன் ரைஸ், பர்க்கர் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டுள்ளார். அதன்பின் மாணவி, வயிற்றுவலி மற்றும் வாந்தி மயக்கத்தால் அவதிப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு சாப்பிட்ட உணவே காரணம் என்று கூறப்பட்டது.
சம்பவம் குறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். உயிரிழந்த மாணவியின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கை நேற்று வெளியானது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பிரேத பரிசோதனை அறிக்கையின் முதல் கட்ட தகவலின்படி, மாணவியின் உடலினுள் இருக்கும் முதன்மை சுவாச தசையான, உதரவிதானம் என்ற உள்ளுறுப்பு, பிறந்ததில் இருந்து பலவீனமாக இருந்துள்ளது. மாணவி கூடைப்பந்து விளையாடும் போது, உதரவிதானம் முற்றிலுமாக கிழிந்து, அதன் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டு மரணம் அடைய காரணம் என்பது தெரியவந்துள்ளது' என்றனர்.

