ஆதவை ஏன் கண்டிக்கவில்லை? விஜய்க்கு தி.மு.க., கேள்வி
ஆதவை ஏன் கண்டிக்கவில்லை? விஜய்க்கு தி.மு.க., கேள்வி
ADDED : அக் 01, 2025 06:14 AM

சென்னை: ''அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான கருத்தை பதிவிட்ட ஆதவ் அர்ஜுனாவை, விஜய் ஏன் கண்டிக்கவில்லை,'' என, தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா கேள்வி எழுப்பினார்.
சென்னை அறிவாலயத்தில், அவர் அளித்த பேட்டி:
கரூரில், விஜய் ஏன் களத்தில் நிற்கவில்லை; அவருடன் இருக்கிற தலைவர்கள் எல்லாம் அங்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவில்லையே ஏன்? அவர்களை அறியாமல், அவர்களிடத்தில் குற்ற உணர்வு இருக்கிறது. அதனால் தான் ஒடி வந்து விட்டனர் என்பது தான் உண்மை.
நேபாளத்தில் நடந்ததுபோல இங்கு ஒரு புரட்சி நடக்கும் என்கிறார், த.வெ.க., நிர்வாகி ஆதவ் அர்ஜுனா.
தமிழகத்தில் புரட்சி வர வேண்டும் என, இந்தியாவின் இறையாண்மைக்கு, ஒருமைப்பாட்டிற்கு எதிராக சொல்கிறார்.
அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான ஒரு கருத்தை வெளியிட்டு விட்டு, அதற்கு மிகக் கடுமையான விமர்சனம் வந்ததும், எங்கே நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், உடனே, தன் பதிவை நீக்கி உள்ளார்.
பதிவு போட்ட அவரை கண்டித்தோ, அக்கட்சி அறிக்கை வெளியிடவில்லை. அந்த கட்சியின் தலைவரும் அவரை கண்டிக்கவில்லை; சம்பந்தப்பட்ட ஆதவ் அர்ஜுனாவும், தான் செய்தது தவறு என, ஒரு அறிக்கை கொடுக்கவில்லை.
ஏன் ஒளிந்து கொள்ள வேண்டும். எதுவாக இருந்தாலும் மக்களிடம் விளக்கம் சொல்ல வேண்டாமா? இந்திய இறையாண்மைக்கு எதிரான இந்த நடவடிக்கை, தமிழக அரசியலுக்கு நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.