மண்ணின் மைந்தர்களை மனிதராக பாருங்களேன்! கோடிகள் கொட்டியும் குடிசைகள் மட்டுமே மிச்சம்?
மண்ணின் மைந்தர்களை மனிதராக பாருங்களேன்! கோடிகள் கொட்டியும் குடிசைகள் மட்டுமே மிச்சம்?
UPDATED : ஜூலை 10, 2025 04:36 AM
ADDED : ஜூலை 09, 2025 09:37 PM

நம் மாநிலத்தில், 36 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், மொத்தமுள்ள மக்கள் தொகையில், 3.5 சதவீதம் மட்டுமே உள்ளனர். மாநிலத்தில், 20 மாவட்டங்களில் இவர்கள் வாழ்ந்து வரும் நிலையில், மலை மாவட்டமான நீலகிரியில், 'தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பணியர், காட்டு நாயக்கர்,' ஆகிய, 6- சமுதாய பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த, 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நீலகிரி மாவட்டத்தில், 28,889 பேர் வசிப்பதாக தெரிய வந்துள்ளது. இவர்களில், தோடர், கோத்தர் மற்றும் குரும்பர் சமுதாய மக்கள் விவசாயம் மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஆனால், பணியர், இருளர், காட்டு நாயக்கர் பழங்குடியின மக்கள் இதுவரை விவசாயம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வளர்ச்சி காணாமல், வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் மிகவும் நலிந்த நிலையில் வசித்து வருகின்றனர். அதில்,பெரும்பாலானர்கள், வெளி ஆட்களை கண்டால், ஓடி ஒளிந்து கொள்ளும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர்.
சமீப காலமாக, பழங்குடியின மக்களில், கல்லுாரி படிப்பை நிறைவு செய்த இளைய தலைமுறையினர் அதிகளவில் இருந்தும், அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை வழங்குவதில் அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
மாவட்ட தலைநகரத்திற்கு முக்கிய வி.ஐ.பி.,கள்வரும்போது, வெறும் காட்சி பொருளாக மட்டுமே பழங்குடியின மக்கள் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றனர்.
பட்டா வழங்கியும் பயனில்லை
இந்நிலையில், மாநில அரசு சார்பில் சமீபத்தில், 1,000 பழங்குடியின குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வீடு கட்ட தற்போது, 5.70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த போதும், பல்வேறு கிராமங்களில் வீடு கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பணிகள் நடந்த இடங்களில் மழை காலத்தில் வீடுகளின் சுவர்கள், 'மழை நீரில் கரையும்' அளவுக்கு தான் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளன. பல கிராமங்களில், 'நடைபாதை, சாலை, குடிநீர், தெருவிளக்கு,' என, எந்த வசதிகளுமே இல்லாமல் கற்கால மனிதர்களை போல மண்ணின் மைந்தர்கள் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர்.
'சிக்கல் செல் அனிமியா' அபாயம்
பூர்வ குடிகளான இவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகம் உள்ளன. அதில், குறிப்பிட்ட சில பழங்குடிகளுக்கு, 'சிக்கல் செல் அனிமியா' என்ற ரத்தசெல் பாதிப்பு பரம்பரை நோயாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த சிகிச்சைகள் மட்டும் தொடர்ந்து வருகிறது.
அரசு இவர்களின் பொருளாதார முன்னேற்றம், கல்வி, உடல் ஆரோக்கியம், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்விடங்களில் உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை, 70 ஆண்டுகளாக செயல்படுத்தினாலும், அவை முழுமையாக அவர்களை சென்றடைவதில்லை. இதனால், பெரும்பாலான பழங்குடியினர், மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகின்றனர். பல குடும்பங்கள் கூலிகளாக பணிக்கு சென்று, போதையின் பிடியில் சிக்கி உள்ளன.
விசாரணை குழு அமைக்க வேண்டும்
மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஒவ்வொரு பட்ஜெட் கூட்ட தொடரிலும் பழங்குடியினர் நலனுக்காக திட்டங்கள்; நிதி ஒதுக்கப்படுகிறது. அவை முழுவதுமாக பழங்குடியின மக்களை சென்றடைவதில்லை. இது குறித்து முழுமையான தகவல்களை அறிய, மாநில அரசு பழங்குடிகள் வாழ்வியலை பற்றி அறிந்த தனிக்குழுவை அமைக்க வேண்டும்.
மாவட்டத்தில், பிற மக்கள் செல்லாத ஒதுக்கப்பட்ட இடங்களிலும் வாழும் பழங்குடியின மக்களை சந்தித்து, இதுவரை அரசு நிர்வாகங்கள் ஒதுக்கீடு செய்த நிதி, கிராமங்களில் முழுமையாக சென்றடைந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
அதில், குளறுபடிகள் நடந்திருந்தால், இத்திட்டங்களை நிறைவேற்றிய அதிகாரிகள், திட்ட குழுவினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், வரும் காலங்களில் பழங்குடியினருக்கான திட்டங்கள் முழுமையாக அவர்களை சென்றடைந்து, அழிவின் பிடியில் உள்ள இந்த சமுதாயத்தை காப்பாற்ற முடியும்.
கூடலுார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சலீம் கூறுகையில்,'' ஊராட்சி ஒன்றியம் முழுவதும், 960 வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வனத்துறை தடையால் பணி பாதியில் உள்ளது. விரைவில் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
-நிருபர் குழு-