சிறுநீரக மாற்று ஆப்பரேஷன் முறைகேடு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அரசுக்கு மருத்துவ அலுவலர்கள் கேள்வி
சிறுநீரக மாற்று ஆப்பரேஷன் முறைகேடு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அரசுக்கு மருத்துவ அலுவலர்கள் கேள்வி
ADDED : ஆக 13, 2025 04:07 AM
'உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் மருத்துவ மனைகளில், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு மட்டும் தடை விதித்தது போதுமானதா' என, மருத்துவ அலுவலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை போன்றவற்றில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முறைகேடாக நடத்தியது தெரியவந்தது.
அதனால், அந்த மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது.
அதேநேரத்தில், முறைகேடுக்கு உடந்தையாக இருந்த மருத்துவமனை நிர்வாகிகள், இடைத்தரகர்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது, மருத்துவ அலுவலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
முறைகேடு நடந்த மருத்துவமனைகளில், உறுப்பு மாற்று சிகிச்சைக்கு முழுமையாக தடை விதிக்காமல், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான உரிமம் மட்டுமே ரத்து செய்யப்படும் என, அரசு அறிவித்து இருப்பது போதுமானதாக இல்லை.
மருத்துவமனை நிர்வாகங்களின் ஒத்துழைப்போடு, போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான அனுமதி பெறப்பட்டதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. மருத்துவமனை நிர்வாகங்கள் மீதோ, பணியாளர்கள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை .
போலி ஆவணங்களை ஆய்வு செய்யாமல், உறுப்பு மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள், பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட டாக்டர் வினித், தன் அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார். அதற்கான எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை.
இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்தால் மட்டுமே, தமிழகத்தில் எங்கெங்கு முறைகேடுகள் நடந் துள்ளன என்பது தெரிய வரும்.
இவ்வாறு மருத்துவ அலுவலர்கள் கூறினர்.
- நமது நிருபர் -