ADDED : டிச 12, 2024 08:24 PM
சென்னை:'அறங்காவலர் குழுக்களை நியமிக்க முடியவில்லை எனில், ஹிந்து சமய அறநிலைய துறை எதற்கு' என, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், 43,631 கோவில்கள், 45 திருமடங்கள், 69 திருமடங்களுடன் இணைந்த, 69 கோவில்கள், 2,392 அறக்கட்டளைகள், 22 சமண கோவில்கள், ஹிந்து சமய அறநிலயத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த கோவில்களில் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டே, நிர்வகிக்கப்பட வேண்டும்.
ஆனால், பல கோவில்களில் அறங்காவலர்கள் குழு அமைக்கப்படவில்லை. இதனால், கோவில்கள் சீரழிந்து வருவதை தடுக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள அறநிலையத் துறை, 'தமிழகம் முழுதும், 31,000 கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டதாகவும், போதிய விண்ணப்பம் வராததால், 23,500 கோவில்களில் அறங்காவலர் குழு அமைக்க முடியவில்லை' என்று தெரிவித்துள்ளது.
சொத்துக்கள் அதிகம் உள்ள, உண்டியல் வருமானம் அதிகம் கிடைக்கும் கோவில்களில் மட்டும் தான், அறநிலைய துறையின் கவனம் உள்ளது. இந்த வருமானத்தில் பத்தில் ஒரு பங்குகூட கோவில்களுக்கு செலவழிக்கப்படுவது இல்லை. அறங்காவலர் குழுக்களை நியமிக்க முடியவில்லை எனில், அறநிலைய துறை எதற்கு?
தி.மு.க., அரசு உடனே தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஹிந்து கோவில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க வேண்டும். இதை செய்ய முடியவில்லை எனில், கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து, அரசு விலகி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.