புதிய டி.ஜி.பி., நியமனத்திற்கு தாமதம் ஏன்? பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில்
புதிய டி.ஜி.பி., நியமனத்திற்கு தாமதம் ஏன்? பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில்
ADDED : அக் 23, 2025 12:37 AM
சென்னை: 'மத்திய அரசின் அடாவடியே, புதிய டி.ஜி.பி., நியமனத்திற்கு தாமதம்' என, அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, 'டி.ஜி.பி., பதவி காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தும், புதிதாக டி.ஜி.பி., நியமிக்கப்படவில்லை. தங்களுக்கு ஏற்ற நபரை நியமிக்க வேண்டும் என்பதற்காகவே, காலதாமதம் செய்யப்படுகிறது' எனக் கூறி உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால், புதிய டி.ஜி.பி., நியமனத்திற்கான பட்டியல், யு.பி.எஸ்.சி., என்னும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு, உரிய காலத்தில் அனுப்ப இயலவில்லை. வழக்கு முடிந்த பின், அந்த பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.
டி.ஜி.பி., நியமனப் பட்டியல் தொடர்பாக, யு.பி.எஸ்.சி., நடத்திய கூட்டத்தில், விதிகளுக்கு புறம்பாக, சில பெயர்கள் முன்மொழியப்பட்டது. இதை தமிழக அரசு ஏற்கவில்லை. மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல் அமைதி காக்க முடியாது.
தாங்கள் விரும்பியவர்களை முன்மொழிந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பட்டியல் அனுப்பி உள்ளது. அதை ஏற்காத தமிழக அரசு, அதற்கான காரணங்களை விளக்கி, கடிதம் எழுதி உள்ளது. அதற்கான பதில் இன்னும் பெறவில்லை.
தனக்கு வேண்டப்பட்ட நபரை, தமிழகத்தில் டி.ஜி.பி.,யாக அமர்த்த, மத்திய அரசு முயலும் அடாவடிதான், இந்த பிரச்னைக்கு காரணம்.
தற்போது டி.ஜி.பி., நியமனத்தை குறைகூறும் பழனிசாமி, ஜெயலலிதா ஆட்சியில், எத்தனை ஆண்டுகள் டி.ஜி.பி., இல்லாமல் அரசை நடத்தினார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.