ADDED : பிப் 23, 2024 02:23 AM
சென்னை: கிராமங்களில் அதிகளவில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவதற்காக, ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
சட்டசபையில், அதன் மீது நடந்த விவாதம்:
த.வா.க., - வேல்முருகன்: மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரத்தை சட்டம் வழங்குகிறது.
ஆனால், ஊராட்சி ஒன்றிய குழுவிற்கு பதிலாக, ஆய்வாளர் என்ற பெயரில் அதிகாரிக்கு அதிகாரம் வழங்க, இந்த சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
அதிகாரிகளிடம் அதிகாரத்தை குவித்து வைக்கக்கூடாது. எனவே, இதில் மாற்றம் செய்ய வேண்டும்.
அமைச்சர் பெரியசாமி: ஊராட்சிகளில் டீக்கடைகள் துவங்குவதற்கு கூட அனுமதி வழங்குவதில் கெடுபிடிகள் உள்ளன. இப்போது, கிராமங்களில் தொழிற்சாலைகள் அதிகளவில் அமைக்கப்படுகின்றன.
ஆனால், லைசென்ஸ் வழங்குவதற்கு ஏதோ ஒரு காரணத்தை கூறி காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகள் நிறைய வர வேண்டும்.
எனவே, அதில் உள்ள காலதாமதத்தை நீக்குவதற்கு, இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.