ரூ.5,000 வழங்கியது ஏன்? அமைச்சர் ரகுபதி விளக்கம்
ரூ.5,000 வழங்கியது ஏன்? அமைச்சர் ரகுபதி விளக்கம்
ADDED : பிப் 14, 2026 06:33 AM

சென்னை: ''எதிர்க்கட்சிகள் நீதிமன்ற வழக்குகள் வாயிலாக, மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைத்த சதியை உணர்ந்து தான், 5,000 ரூபாயை, முதல்வர் ஸ்டாலின் முன்கூட்டியே வழங்கி உள்ளார்,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சென்னை அறிவாலயத்தில் அவர் அளித்த பேட்டி:
பிப்., மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை, 3,000 ரூபாயை மொத்தமாக, 1.31 கோடி பெண்களுக்கு, முதல்வர் வழங்கி, இன்ப அதிர்ச்சி தந்துள்ளார். இந்தத் தொகையை அறிவித்து விட்டு வழங்கினால், எதிர்க்கட்சிகள் உடனே நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு வாங்கி விடுவர். எனவே, பெண்களுக்கு கிடைக்க வேண்டிய பயன், தடையின்றி சேர வேண்டும் என, முதல்வர் இதை வழங்கி உள்ளார்.
தேர்தல் நேரத்தில் தான் கோடைக்கால நிதி வழங்கப்படுவதாக கூறும் குற்றச்சாட்டு தவறானது. இத்திட்டத்தை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர் சட்டசபை தேர்தலை சாக்காக வைத்து, நீதிமன்ற வழக்குகள் வாயிலாக முடக்க சதி செய்தனர். இதை உணர்ந்து தான், மூன்று மாதங்களுக்கான தொகையை, முதல்வர் முன்கூட்டியே வழங்கியுள்ளார் .
இவ்வாறு அவர் கூறினார்.

