தனியார் பல்கலை சட்ட மசோதா திடீரென வாபஸ் பெறப்பட்டது ஏன்?
தனியார் பல்கலை சட்ட மசோதா திடீரென வாபஸ் பெறப்பட்டது ஏன்?
UPDATED : அக் 29, 2025 06:53 AM
ADDED : அக் 29, 2025 06:43 AM

சென்னை: தனியார் பல்கலை அமைப்பதற்கான குறைந்தபட்ச நிலப்பரப்பு அளவை மேலும் குறைப்பதற்காகவே, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா திரும்ப பெறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில், 25 ஏக்கர்; நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், 30 ஏக்கர்; ஊரக பகுதிகளில், 50 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் இருந்தால், தனியார் பல்கலை துவங்க வகை செய்யும் சட்ட மசோதா, கடந்த, 17ம் தேதி, சட்டசபையில் நிறைவேறியது. அப்போது, 'உயர் கல்வியில் தனியார் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும். அரசு உதவி பெறும் கல்லுாரிகள் பல்கலையாக மாறினால் கட்டணம் உயர்ந்து, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
இடஒதுக்கீடு முறையாக இருக்காது' என்று கூறி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகனும், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., நாகை மாலியும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனியார் பல்கலை அமைப்பதற்கான நிலப்பரப்பை மேலும் குறைக்க வேண்டும் என, தி.மு.க., - எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கொ.ம.தே.க., தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் வலியுறுத்தினர்.
அவர்களுக்கு பதிலளித்த, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், 'உயர் கல்வியும், ஆராய்ச்சியும் வளர வேண்டும் என்பதற்காக, தனியார் பல்கலை சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதனால், இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள நிலப்பரப்பை மேலும் குறைக்க வேண்டும் என, சில எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த வகையில், ஊரகப் பகுதிகளில் இருக்க வேண்டிய 50 ஏக்கரை, 45 ஏக்கராக குறைத்துள்ளோம்' என்றார். இந்நிலையில், தனியார் பல்கலை சட்ட மசோதா திரும்ப பெறப்படுவதாக, அமைச்சர் கோவி செழியன், கடந்த 26ம் தேதி திடீரென அறிவித்தார்.
பின்னணி என்ன?
ஊரக பகுதிகளில் தனியார் பல்கலை அமைக்க, 50 ஏக்கர் நிலம் இருந்தால் போதும் என, சட்ட மசோதாவில் உள்ளது. ஆனால், அமைச்சர் கோவி செழியன் பேசும் போது, '45 ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளது' என்றார். அவர் வாய்மொழியாக அப்படி சொன்னாலும், சட்ட மசோதாவில் இருப்பது தான் செல்லுபடியாகும். அதனால், குழப்பம் ஏற்பட்டது.
மேலும், தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், சிறுபான்மை கல்லுாரி நிர்வாகத்தினரும், இந்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்யுமாறு, அரசை வலியுறுத்தி உள்ளனர். அதை செயல்படுத்தவும், நிலப்பரப்பை மேலும் குறைக்கவுமே, சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டு உள்ளதாக, உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

