இலங்கை நபர் கைது குறித்து அந்நாட்டுக்கு தகவல் கொடுக்காதது ஏன்: ஐகோர்ட் கேள்வி
இலங்கை நபர் கைது குறித்து அந்நாட்டுக்கு தகவல் கொடுக்காதது ஏன்: ஐகோர்ட் கேள்வி
ADDED : ஜூன் 26, 2025 10:29 PM
சென்னை:இலங்கை துாதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி, அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த சுஜாந்தன் என்பவர் தாக்கல் செய்த மனு:
குற்ற வழக்கில், 2020ல் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். புழல் சிறையில், எங்களுக்கு சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுகிறது. அந்த உணவு உடலுக்கு ஒத்துழைக்கவில்லை. மேலும், என் கைது குறித்து இலங்கை துாதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கவில்லை.
எனவே, இலங்கை துாதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
இந்த மனு, நீதிபதிகள் ரமேஷ், லட்சுமி நாராயணன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இலங்கை நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டது குறித்து, அந்நாட்டின் துாதரகத்திற்கு தகவல் தெரிவிக்காதது, வியன்னா ஒப்பந்தத்தை மீறும் செயல்' என, வாதிட்டார்.
சிறை நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இலங்கை துாதரகத்திற்கு மத்திய அரசு தான் தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நம் நாட்டு மீனவர்கள், இலங்கை சிறையில் இருக்கும்போது, துாதரக அதிகாரிகளை சந்திப்பதற்கு அனுமதி கேட்பர். அதேபோல், அந்நாட்டைச் சேர்ந்தவருக்கும், துாதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கைது குறித்து இலங்கை துாதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என்பது குறித்து, சிறை நிர்வாகத்திடம் கேட்டு தெரிவிக்க வேண்டும். வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.