விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
ADDED : அக் 03, 2025 04:24 AM

திருச்சி: ''கரூர் சம்பவத்துக்கு பின்பும், குற்ற உணர்வு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் முயற்சிக்கிறார்,'' என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில், இளைஞர்கள் போதையில் பங்கேற்கின்றனர். கரூரில், 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது, அதில், பெரும்பாலான இளைஞர்கள், போதையில் இருந்துள்ளனர். பா.ஜ.,வை கொள்கை எதிரி என விஜய் கூறினார். ஆனால், கரூர் விவகாரத்தில் விஜயை காப்பாற்ற பா.ஜ., ஓடி வருகிறது.
அக்கட்சியின் மூத்த தலைவர்கள், கரூர் வந்து, விஜய்க்கு ஆதரவாக பேசிச்சென்றுள்ளனர். 'தமிழக அரசும், போலீசாரும் பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் தோல்வியடைந்து விட்டது' என, பிரச்னையை மடைமாற்றம் செய்ய முயன்றுள்ளனர்.
பா.ஜ., கொள்கை எதிரி என்று சொன்ன விஜயை காப்பாற்ற, பா.ஜ.,வினர் டில்லியில் இருந்து ஓடோடி வந்தது ஏன்? பா.ஜ., துாண்டுதலில் தான் அரசியலுக்கு விஜய் வந்துள்ளார் என்பது, கரூர் சம்பவத்துக்குப் பின், வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
விஜயை, தங்கள் கூட்டணியில் சேர்க்காமல், தனியாக போட்டியிட வைத்து, சிறுபான்மையினர் ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு போக விடாமல் தடுப்பதே பா.ஜ., நோக்கம்.
கரூர் விவகாரத்தில் தமிழக போலீசாரின் அணுகுமுறை ஒருதலைபட்சமாக இருக்கிறது. த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ், விஜய் மீது வழக்கு போடாதது ஏன்? ஆக, வலுத்தவனுக்கு ஒரு நீதி; இளைத்தவனுக்கு வேறொரு நீதியா? விஜய் மீது வழக்குப் போட முடியாவிட்டால், ஆனந்த் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்.
'பா.ஜ., வுக்கும், தி.மு.க.,வுக்கும் 'அண்டர் கிரவுண்ட் டீலிங்' இருப்பதாக, விஜய் தரப்பு சொல்கிறது. ஆனால், விஜய் மீது வழக்கு போடாமல், பாதுகாப்பு அளிப்பதால், விஜய்க்கும் தி.மு.க.,வுக்கும் 'அண்டர் கிரவுண்ட் டீலிங்' இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறதே. போலீசார், எதற்காக அச்சப்பட வேண்டும்? யார் அழுத்தம் கொடுத்து, விஜய் மீது நடவடிக்கை எடுக்காமல் நழுவுகின்றனர்.
இந்த விவகாரத்தில், தி.மு.க., அரசை குறிவைத்து பா.ஜ., செயல்படுகிறது.
எனவே, பிற மாநில எம்.பி.,க்கள் அடங்கிய குழுவை, காங்., மூத்த தலைவர் ராகுல், கரூருக்கு அனுப்பி வைக்க வேண்டும். பா.ஜ.,வினர், தங்கள் விருப்பம் போல், ஒரு அறிக்கை அளித்து, தி.மு.க., அரசுக்கு எதிரான கருத்துருவாக்கம் செய்ய முயலும்போது, அதை தடுக்க, காங்கிரஸ் தரப்பில் முயற்சிக்க வேண்டாமா?
கரூரில் 41 பேர் உயிரிழந்ததில், விஜய்க்கு கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லை; அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்; உளப்பூர்வமாக அவர் வருந்தவில்லை. உயிரிழந்தோர் குடும்பத்தினர் பற்றியும் சிந்திக்கவில்லை.
தி.மு.க.,வுக்கு எதிரான வெறுப்பை உமிழ, பல பேரை ஆர்.எஸ்.எஸ்., களம் இறக்கி விட்டுள்ளது; அதில் ஒருவர் விஜய். நடிகர் ரஜினிக்கு முதல்வராகும் வெறி, வேட்கை இல்லை. அதனால் தான், கட்சி துவங்காமல் ஒதுங்கி விட்டார். ஆனால், விஜய், பதவி வேட்கையில் பறக்கிறார்; திட்டமிட்டு நாடகம் நடத்துகிறார்.
விஜய் போன்றோர் வாயிலாக, திராவிட இயக்க ஆட்சியை ஒழிக்க, பா.ஜ., நினைக்கிறது. அன்னா ஹசாரேவை பயன்படுத்தி, டில்லியில் காங்கிரசை துாக்கி வீசிய பா.ஜ., அதன்பிறகு, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலையும் துாக்கி எறிந்தது. டில்லியில் இப்போது ஆட்சியை பா.ஜ., பிடித்து விட்டது. அதேநிலை, இங்கும் வரும்; அதற்கு முன், தமிழகம் கலவர பூமியாக்கப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.