தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சர்வதேச அங்கீகாரம் பெற்ற பறவை சரணாலயங்களில் அடிப்படை வசதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா? வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

சர்வதேச அங்கீகாரம் பெற்ற பறவை சரணாலயங்களில் அடிப்படை வசதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா? வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

சர்வதேச அங்கீகாரம் பெற்ற பறவை சரணாலயங்களில் அடிப்படை வசதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா? வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஜன 31, 2025 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 12:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'தமிழகத்தில் ராம்சார் பட்டியல் எனப்படும், சர்வதேச அங்கீகாரம் பெற்ற பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்ட 18 இடங்களில், சூழலியல் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மேம்பாடு கேள்விக்குறியாகி உள்ளது' என, வன உயிரின ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால், சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாப்பதன் வாயிலாக மட்டுமே, சூழலியல் சமநிலையை உறுதிப்படுத்த முடியும்.

ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் நடந்த மாநாட்டில், சதுப்பு நிலங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, சில குறிப்பிட்ட வரையறைகள் அடிப்படையில், சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் சர்வதேச அளவில் பட்டியலிடப்படுகின்றன. அந்த வரிசையில் தமிழகத்தில் கோடியக்கரை மட்டுமே, ராம்சார் பட்டியலில் முதலில் இடம் பெற்றிருந்தது.

கடந்த, 2021 முதலான நான்கு ஆண்டுகளில், புதிதாக 17 இடங்கள் ராம்சார் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதனால், இந்த, 18 இடங்கள் குறித்த விபரங்கள், சர்வதேச அளவில் வெளியிடப்பட்டுள்ளன.

உலகில் எந்த நாட்டில் இருப்போரும், இந்த இடங்கள் குறித்த முழு விபரங்களை அறிந்து, இங்கு வந்து செல்ல முடியும். ஆனால், இங்கெல்லாம் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது:

பறவைகளின் வருகை, சூழலியல் அடிப்படை கூறுகள் அடிப்படையில், சர்வதேச அங்கீகாரம் கிடைத்தாலும், 18 இடங்களையும் பாதுகாப்பது, மேம்படுத்துவது, தமிழக வனத்துறையின் பொறுப்பாகும்.

இதில், குறிப்பிட்ட சில இடங்கள் மேம்பாட்டுக்கு மட்டும், 2023ல் தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதியும் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்ய போதுமானதாக இல்லை.

பெரும்பாலான நீர்நிலைகளுக்கு நீராதாரம் கிடைப்பதில் சிக்கல், ஆக்கிரமிப்புகள், தொழிற்சாலை மாசு என, பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இப்பிரச்னைகளில் இருந்து நீர்நிலைகளையும், அங்கு வரும் பறவைகளையும் பாதுகாக்க, வனத்துறை நடவடிக்கை போதுமானதாக இல்லை.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற, 18 இடங்களையும் மக்கள் எளிதாக வந்து பார்த்து செல்வதற்கு ஏற்ற வகையில், அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஆண்டுகளிலாவது தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க, வனத்துறை முன்வர வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

அரசிடம் பேசி வருகிறோம்

தமிழக ஈர நிலங்கள் இயக்கம் சார்பில், ராம்சார் பட்டியலில் உள்ள, 18 இடங்களை, மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வந்து செல்லும் பறவைகள் குறித்த விபரங்கள், பிற உயிரினங்கள் குறித்த முழுமையான தகவல் தொகுப்பும் உருவாக்கப்பட உள்ளது. பொது மக்கள் வந்து செல்வதற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, கூடுதல் நிதி ஒதுக்க அரசிடம் பேசி வருகிறோம். வரும் ஆண்டுகளில், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

- உயர் அதிகாரி, வனத்துறை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us