அதிக விலைக்கு மது விற்றால் அனைவரையும் 'சஸ்பெண்ட்' செய்வதா? டாஸ்மாக் யூனியன் வழக்கு
அதிக விலைக்கு மது விற்றால் அனைவரையும் 'சஸ்பெண்ட்' செய்வதா? டாஸ்மாக் யூனியன் வழக்கு
ADDED : நவ 12, 2024 03:22 AM

சென்னை: அதிக விலைக்கு மதுபானம் விற்றால், 'டாஸ்மாக்' ஊழியர்களை, 'சஸ்பெண்ட்' செய்வதாக பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் செயலர் மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில், 5,408 சில்லரை மதுக்கடைகள் இயங்குகின்றன. இங்கு, 24,986 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
ஊழியர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. ஆனால், டாஸ்மாக் நிறுவனம், பெரிய அளவில் வருவாய் ஈட்டுகிறது. மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, அதிக விலைக்கு விற்கப்பட்டால், அந்த கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக, புதிய விதியை நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையில், அதிக விலைக்கு மதுபானம் விற்றால், விற்பனையாளர் மட்டுமின்றி, ஊழியர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
தனிநபரின் செயலுக்கு கூட்டாக தண்டனை விதிப்பது, காலனி ஆதிக்கத்தில் தான் நடக்கும். கூட்டு தண்டனை விதிப்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. கூடுதல் விலைக்கு விற்பதில், தனிநபர் ஈடுபடலாம்; அதில், மற்றவர்களுக்கு தொடர்பு இருக்காது.
டாஸ்மாக் நிர்வாகத்தின் சுற்றறிக்கை, இயற்கை நீதியை மீறுவதாகவும், தொழில் தகராறு சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது. எனவே, சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

