தி.மு.க., மீது பழி சுமத்திய பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா? சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி
தி.மு.க., மீது பழி சுமத்திய பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா? சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி
ADDED : பிப் 03, 2025 07:02 AM

சென்னை : தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி அறிக்கை: தி.மு.க., ஆட்சியின் நலத்திட்டங்களால், மகளிர் முன்னேறுவதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில், தி.மு.க., அரசின் மீது பழி போட முயற்சிப்பதும், சில நாட்களிலேயே உண்மை தெரியவந்து, அந்த முயற்சி தோல்வி அடைவதும் வாடிக்கையாகி விட்டது.
அந்த வகையில், சென்னை இ.சி.ஆரில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட சந்துரு, அ.தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்தவர் என, தன் பின்புலத்தை அவரே ஒப்புக்கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.
தி.மு.க., கொடியை காட்டி, கட்சி மீது பொய்யான வீண்பழி சுமத்தி, சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்சோ குற்றங்கள் என அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களும், அவர்களது குடும்பத்தினரும் தான், பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது, ஒவ்வொரு குற்றச்செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது.
தி.மு.க., மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள், இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வர். வீராவேசமாக அறிக்கை விட்ட பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

