ADDED : ஏப் 22, 2025 02:27 AM

சென்னை : சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில், சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமை வகித்தார். தி.மு.க., - எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி சோமு, கதிர்ஆனந்த், கிரிராஜன், செல்வம் மற்றும் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்கள் தங்கள் பகுதிகளில் ரயில் பயணியருக்கான தேவைகள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக பேசினர்.
கூட்டம் முடிந்தபின் டி.ஆர்.பாலுவிடம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும், வரும் 25, 26ல் ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் ரவி நடத்துவது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, “துணைவேந்தர்கள் பங்கேற்பரா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
சுயநினைவோடு இருப்பவர்கள், நியாயமாக சிந்திப்பவர்கள், இப்படி நிச்சயம் செய்ய மாட்டார்கள்,” என்றார்.