ADDED : ஜன 28, 2025 08:31 AM

மயிலாடுதுறை :  மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவச்சந்திரன், 27; தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது தாய், சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, நிஷாந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
மருத்துவம் படித்துவிட்டு, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் பணியாற்றி வருவதாக, சிவச்சந்திரனிடம் அந்த பெண் நிஷாந்தி தெரிவித்தார். இருவருக்கும் கடந்த 20ம் தேதி, சீர்காழியில் திருமணம் நடந்தது.
இவர்களின் திருமண போட்டோக்களை, சமூக வலைதளத்தில் பார்த்த கண்டபுத்துார் நெப்போலியன், 34, என்பவர், சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 25ல் புகார் தெரிவித்தார்.
அதில், 'புகைப்படத்தில் உள்ள பெண், தன் பெயரை மீரா என கூறி, அரசு வேலை செய்து வருவதாக சொல்லி, என்னுடன் பழகி, 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் சென்னையில் வசித்தோம். 'கடந்த 2021ம் ஆண்டு என்னை விட்டு சென்று விட்டார். தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்த போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். என்னை ஏமாற்றிய அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, தான் ஏமாற்றப்பட்டது குறித்து, சிவச்சந்திரன் நேற்று முன்தினம், சீர்காழி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தெரிய வந்ததாவது:
கொடியம்பாளையம் தீவு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி, 35. இவருக்கும், பழையார் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும், 2010ம் ஆண்டு முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிலம்பரசன் இறந்து விட்டதால், பெண் குழந்தையை கணவரின் சகோதரர் பராமரிப்பிலும், ஆண் குழந்தையை தன் தாய் வீட்டிலும் அந்த பெண் ஒப்படைத்தார்.
ஆடம்பரமாக வாழ்க்கை நடத்த ஆசைப்பட்டு, தன் பெயரை மாற்றிக்கொண்டு, 2017ல் நெப்போலியன், 2021ல் சிதம்பரம் ராஜா, தற்போது சிவச்சந்திரன் ஆகிய மூவரை ஏமாற்றி திருமணம் செய்தது தெரிந்தது.
அதற்கு முன், சிலம்பரசனுடன் திருமணம் நடந்துள்ளதால், அவர், நான்கு ஆண்களை மணந்துள்ளார் என போலீசார் கூறினர். இதையடுத்து, அந்த பெண்ணை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருவாரூர் மகளிர் சிறையில் அடைத்தனர்.

