கார் கவிழ்ந்து பெண் பலி : சுற்றுலா வந்த இடத்தில் சோகம்
கார் கவிழ்ந்து பெண் பலி : சுற்றுலா வந்த இடத்தில் சோகம்
ADDED : ஜூலை 24, 2025 08:16 PM

ஊட்டி:ஊட்டியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரூவை சேர்ந்தவர் மோகித் சிங் , 40, மனைவி மோனிஷா, 36, 6 வயதில் மகனும், 4 மாத கைக்குழந்தையும் உள்ளது. மோகித் சிங் பெங்களூரூவில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். மோகித் சிங் , உறவினர்களுடன் இரண்டு காரில்ஊட்டிக்கு சுற்றுலா வர நேற்று காலை பெங்களூரூவிலிருந்து ஊட்டிக்கு வந்து கொண்டிருந்தனர்.
ஒரு காரில் மோகித் சிங்கின் மனைவி, மாமனார், மாமியார் மற்றும் நான்கு மாத கைக்குழந்தை இருந்தது. மற்றொரு காரில் அவருடைய உறவினர்கள் மற்றும் மோகித் சிங்கின் 6 வயது குழந்தை இருந்தது. தலைகுந்தா -பிங்கர்போஸ்ட் இடையே ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி எதிரே சாலையில் வந்தபோது மோகித் சிங் வந்த காரும், எதிரில் ஊட்டியில் இருந்து வந்த லாரியும் மோதிக்கொண்டது.
இதில், மோகித் சிங்கின் கார் பின்னோக்கி சென்று 20 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தீயணைப்புத் துறையினர், போலீசார் அங்கு வந்து காரில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். இந்த விபத்தில் மோனிஷா தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. புதுமந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

