சென்னை ஈ.சி.ஆர்.,யில் பெண்களை துரத்திய சம்பவம்: 5 பேர் கைது
சென்னை ஈ.சி.ஆர்.,யில் பெண்களை துரத்திய சம்பவம்: 5 பேர் கைது
UPDATED : ஜன 31, 2025 11:55 AM
ADDED : ஜன 31, 2025 12:39 AM

சென்னை: சென்னை ஈ.சி.ஆர்., சாலையில், அதிகாலை, 2:00 மணிக்கு காரில் சென்ற பெண்களை, தி.மு.க., கொடிகட்டிய இரண்டு கார்களில் துரத்திய விவகாரத்தில், கல்லுாரி மாணவர் உட்பட 5 பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கானத்துாரை சேர்ந்த, 26 வயது பெண், தன் தோழியருடன், ஜனவரி, 25ம் தேதி, அதிகாலை, 2:00 மணிக்கு, கோவளத்தில் இருந்து தன் வீட்டிற்கு சென்றார். அவர்கள் சென்ற காரை, தி.மு.க., கொடி கட்டிய இரண்டு கார்களில் வந்த எட்டு வாலிபர்கள் பின் தொடர்ந்தனர்.இரண்டு கார்களிலும் வந்த வாலிபர்கள், முட்டுக்காடு பாலம் அருகே தங்கள் கார்களை சாலையின் குறுக்கே நிறுத்தி, பெண்கள் சென்ற காருக்கு வழி விடாமல் தடுத்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பிய பெண்கள், வீட்டிற்கு செல்ல வேகமாக காரை இயக்கினர். அப்போதும் விடாமல், இரண்டு கார்களில் துரத்திய வாலிபர்கள், பனையூரில் பெண் ஒருவரின் வீடு வரை சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து, கானத்துார் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். வாலிபர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீசார் பெருங் களத்துார், இரும்புலியூரில் நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு கார்களை நேற்று பறிமுதல் செய்துள்ளனர். தனியார் கல்லுாரி மாணவர் உட்பட, 5 பேரை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். காரில் சென்ற பெண்களை, 2 கார்களில் சென்ற, 7 பேர் துரத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்துரு எங்கே?
பெண்களை துரத்திய கார் ஒன்றின் உரிமையாளர் இரும்புலியூரைச் சேர்ந்த சந்துரு, 26 என்பது தெரிய வந்துள்ளது. இவர் மீது சேலையூர், பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் மோசடி வழக்குகள் உள்ளன. இவருக்கு போலீஸ்காரர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள சந்துருவை போலீசார் தேடுகின்றனர்.