சென்னையை அழகுபடுத்துங்கள்: மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
சென்னையை அழகுபடுத்துங்கள்: மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
ADDED : ஜன 05, 2024 05:08 AM

சென்னை: சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு வரும் 7, 8ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள் வர உள்ளதால், மாநகரை அழகுபடுத்தும் பணி நடக்கிறது.
அந்த வகையில், சென்னை விமான நிலையம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம் ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களுக்கு செல்லும் வழி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை துாய்மையாகவும், அதேநேரம் வண்ணங்கள் பூசி அழகாகவும் மாற்ற மாநகராட்சி உத்தரவிட்டுஉள்ளது.
இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மழையால் சாலையோரங்களில் உள்ள சுவர்கள், மைய பகுதிகள் கறுப்பு வண்ணத்தில் உள்ளன. எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை, முழுதும் அழகுப்படுத்த அந்தந்த மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சேவை துறை மேற்கொள்ளும் பணிகள் முடிய தாமதமானாலும், அச்சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் வகையில் இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.