உலகளாவிய நுாலக உச்சி மாநாடு: 'இணையதளம், கையேடு' வெளியீடு
உலகளாவிய நுாலக உச்சி மாநாடு: 'இணையதளம், கையேடு' வெளியீடு
ADDED : டிச 06, 2024 12:40 AM

சென்னை : தெற்காசிய பல்கலை மற்றும் எல்.ஐ.எஸ்., அகாடமி, மெட்ராஸ் நுாலக சங்கம் சார்பில், டில்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 5 முதல் மூன்று நாட்கள், 'உலகளாவிய நுாலக உச்சி மாநாடு' நடக்க உள்ளது.
இதற்கான இணையதளம் துவக்கம், கையேடு வெளியீட்டு விழா, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று நடந்தது.
தெற்காசிய பல்கலை தலைவர் அகர்வால், இணையதளத்தை துவக்கி வைத்து, கையேடை வெளியிட, அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் வேல்ராஜ் பெற்றுக் கொண்டார்.
எல்.ஐ.எஸ்., அகாடமி சார்பில், பாலம் இதழின் ஆசிரியர் பாலம் கல்யாணசுந்தரத்திற்கு, 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
விழாவில், வேல்ராஜ் பேசியதாவது:
'நுாலக ஒத்துழைப்பின் வாயிலாக, உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பது', இம்மாநாட்டின் நோக்கம். இதன் வாயிலாக, பல்வேறு உலக நாடுகளை எளிதில் இணைக்க இயலும்.
இதைத்தான் பிரதமர் மோடியும் கூறுகிறார். கல்வியில் சிறந்த மனிதர்களால் மட்டுமே, உலக நாடுகளை இணைக்க முடியும். அவ்வாறு இல்லையெனில், நாடுகளுக்கிடையே தொடர் போர்களும், பிரச்னைகளும் அரங்கேறிக் கொண்டே இருக்கும்.
அறிவுசார் சமூகத்தை வளர்ப்பதில், நுாலகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை நமக்கு கற்பிக்கும் பாடங்கள் ஏராளம். கல்வி, ஒரு நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்லும்.
கல்வி வாயிலாக, நாம் அறிவை பெருக்கலாம்; அறிவு நமக்கான தகவல்களை வழங்கும்; ஆனால், தகவல்கள் நமக்கு நுாலகங்களில் இருந்தே கிடைக்கும். எனவே, இளம் மாணவர்கள் இடையே, நுாலகத்தின் அவசியத்தை அதிகரிப்பதன் வாயிலாக, வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை மாற்றலாம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தெற்காசிய பல்கலை தலைவர் அகர்வால் பேசுகையில், ''பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து தரப்பினர் இடையே, நுாலகத்தின் தேவையை, அதிகரிப்பதன் வாயிலாக, அறிவுசார் சமூகமாகவும், குற்றச் செயல்களற்ற சமூகமாகவும், நாட்டை உருவாக்க இயலும்,'' என்றார்.