ADDED : மார் 19, 2024 06:20 AM

ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள, இளம் படுகர் சங்க வளாகத்தில், டீ கடை உள்ளது. இந்த கடைக்கு, ஆவின் பால் பாக்கெட் வாங்குவது வழக்கம்.
நேற்று காலை, கடை ஊழியர், சேரிங்கிராஸ் உழவர் சந்தை பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து மொத்தமாக, ஆவின் பால் பாக்கெட்டை வாங்கினார்.
பாலை கொதிக்க வைப்பதற்காக, பால் பாக்கெட்டை வெட்டி ஊற்றும் போது, வெள்ளை நிறத்தில் புழுக்கள் நெளிந்தன. அதிர்ச்சி அடைந்த கடைக்காரர், உணவு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், சம்பந்தப்பட்ட கடைக்கு வந்து ஆய்வு செய்தபோது, புழுக்கள் நெளிந்தது உறுதி செய்யப்பட்டது.
அலுவலர் சிவராஜ் கூறுகையில், ''குறிப்பிட்ட 'பேட்ஜ்' எண் கொண்ட ஆவின் பாக்கெட்டுகள் சப்ளை செய்யப்பட்ட கடைகளில், ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு இருப்பின், சம்பந்தப்பட்ட ஆவின் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

