மருத்துவமனை முன் வாலிபர் கொலை; மகளைப் பறிகொடுத்த தந்தை ஆத்திரம்!
மருத்துவமனை முன் வாலிபர் கொலை; மகளைப் பறிகொடுத்த தந்தை ஆத்திரம்!
UPDATED : நவ 25, 2024 07:20 PM
ADDED : நவ 25, 2024 04:33 PM

கோவை:மகளை காதலித்து ஏமாற்றிய வாலிபரை, கத்தியால் குத்தி கொலை செய்து பழி தீர்த்த தந்தை மற்றும் மகனை போலீசார் திருப்பூரில் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த மகாலிங்கம் மகன் தமிழ்ச்செல்வன் (27). இவர், கோவை துடியலூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் டிரைவராக பணியாற்றினார். இவருடைய தாயாரின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யன் கொல்லகொண்டான் கிராமம். இக்கிராமத்திற்கு தமிழ்ச்செல்வன் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த மலைக்கனி என்பவரின் மகள் ஆனந்தி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அதேநேரத்தில், திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணையும் காதலித்துள்ளார். ஒரே நேரத்தில் காதலில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வன், ஆனந்தியை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மனமுடைந்த ஆனந்தி தூக்கிப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ்ச்செல்வன் தான் ஆனந்தியின் தற்கொலைக்கு காரணம் என இவரின் தந்தை மலைக்கனி மற்றும் அண்ணன் ராஜாராமுக்கு தெரியவந்தது. இதனையடுத்து தமிழ்ச்செல்வனை கொலை செய்யும் நோக்குடன், இருவரும் டூவிலரில் ராஜபாளையத்தில் இருந்து கோவை வந்துள்ளனர். துடியலூரில் தமிழ்ச்செல்வன் பணியாற்றும் மருத்துவமனைக்கு இருவரும் வந்தனர். மொபைல்போன் மூலம், தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டு வெளியே வரவழைத்த இருவரும் அருகேயிருந்த காலியிடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மறைத்து வைத்து இருந்த கத்தியால், தமிழ்ச்செல்வன் கழுத்தை அறுத்தும், மார்பு மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியும் கொலை செய்துவிட்டு டூவிலரில் தப்பிச் சென்றனர்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்து பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் தமிழ்ச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியையும் கைப்பற்றியுள்ளனர். தப்பியோடிய இருவரையும் திருப்பூரில் கைது செய்தனர்.