sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய வாலிபர்கள் ஈ.சி.ஆர்., சாலையில் சினிமாவை மிஞ்சும் பயங்கரம்

/

தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய வாலிபர்கள் ஈ.சி.ஆர்., சாலையில் சினிமாவை மிஞ்சும் பயங்கரம்

தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய வாலிபர்கள் ஈ.சி.ஆர்., சாலையில் சினிமாவை மிஞ்சும் பயங்கரம்

தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய வாலிபர்கள் ஈ.சி.ஆர்., சாலையில் சினிமாவை மிஞ்சும் பயங்கரம்

3


ADDED : ஜன 30, 2025 01:01 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:01 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை, ஈ.சி.ஆர்., சாலையில், அதிகாலை 2:00 மணியளவில், சினிமாவை மிஞ்சும் அளவுக்கு, தி.மு.க., கொடி கட்டிய இரண்டு கார்களில் சென்ற எட்டு வாலிபர்கள், மற்றொரு காரில் சென்ற பெண்களை, மின்னல் வேகத்தில் துரத்திச் சென்று, ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

கடந்த 25ம் தேதி அதிகாலை, சென்னை, ஈ.சி.ஆர்., சாலையில், கானத்துாரைச் சேர்ந்த சின்னி திலங்க், 26, என்ற பெண், தன் தோழியருடன், கோவளத்தில் இருந்து வீட்டிற்கு காரில் புறப்பட்டார்.

மின்னல் வேகம்


அப்போது, தி.மு.க., கொடி கட்டிய இரண்டு கார்களில், எட்டு வாலிபர்கள் பின் தொடர்ந்துள்ளனர். அந்த வாலிபர்கள் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர்களின் நடவடிக்கை மீது சின்னி திலங்க் மற்றும் அவரின் தோழியருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், காரை வேகமாக ஓட்டத் துவங்கி உள்ளனர்.

அப்போது, பின்னால் இரண்டு கார்களில் வந்த வாலிபர்கள், பெண்களின் காரை மின்னல் வேகத்தில் துரத்தினர்.

அதிகாலை, 2:00 மணியளவில், பெண்களின் கார், முட்டுக்காடு பாலம் அருகே சென்றது. அப்போது, பின்னால் துரத்தி வந்த வாலிபர்கள், சினிமா காட்சியை மிஞ்சும் அளவுக்கு திடீரென சாலையை மறித்து, குறுக்காக காரை நிறுத்தினர்.

அதில் இருந்து இறங்கிய வாலிபர் ஒருவர், பெண்களின் காரை நோக்கி ஓடி வந்தார். இதனால், சின்னி திலங்க் மற்றும் அவரின் தோழியர் பயத்தில் உறைந்தனர்.

ஆபாச பேச்சு


வெறித்தனமாக ஓடி வந்த அந்த வாலிபர், பெண்களின் கார் கண்ணாடியை வேகமாக தட்டி, ஆபாசமாக பேசியுள்ளார். அந்த வாலிபர் போதையில் இருந்ததால், அவரிடம் சிக்காமல் இருக்க, காரை வேகமாக பின்நோக்கிச் செல்ல முடிவு செய்தனர்.

காரில் இருந்த பெண் ஒருவர், மற்ற பெண்களை பதற்றம் அடையாமல் நிதானமாக செயல்பட சொல்லிக் கொடுத்தார்.

அதன்படி, காரில் இருந்த மற்ற பெண்களும் நடந்து கொண்டனர். அதற்குள், இரண்டு கார்களில் வந்த வாலிபர்கள், பெண்களை மீண்டும் துரத்த துவங்கினர்.

பாலியல் தொல்லைக்கு ஆளாகி விடுவோம் என பெண்கள் பதற்றத்தில், யாராவது வீட்டை திறந்து வைத்து இருந்தால், உதவி கேட்டு ஓடுவது எனவும் முடிவு செய்தனர்.

தவிப்பு


காரில் இருந்த பெண் ஒருவர், மற்ற தோழியரிடம் தன் உறவினருக்கு மொபைல் போனில் அழைக்குமாறு கூறுகிறார். அனைவரும் அந்த நேரத்தில் செய்வதறியாது தவித்தனர்.

இந்த காட்சிகள் அனைத்தையும், சின்னி திலங்க் தோழி ஒருவர் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். காரில் துரத்திய வாலிபர்கள், பெண்களிடம் தகராறு செய்து, பெரும் ரகளையிலும் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று இரவு, கானத்துார் காவல் நிலையத்தில் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், வாலிபர்களை எச்சரித்து அனுப்பி விட்டதாகவும், அவர்களுக்கு ஆதரவாக, தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர் பேசியதாகவும், இதனால் புகார் வாபஸ் பெற வைக்கப்பட்டதாகவும், போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

போலீசாரின் நடவடிக்கை மீது அதிருப்தியடைந்த பெண்கள், தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்த, 'வீடியோ'க்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது வெளியாகி, பலரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

இடம், சூழல் பொறுத்துதான், பெண்களுக்கு எதிரான அத்துமீறல் நடக்கிறது. சாலையில் மின் விளக்கு எரியவில்லை என்றால், உடனே சரி செய்ய வேண்டும். அனைத்து சாலைகளிலும் அவசர பாதுகாப்பு எண்கள், 'சிசிடிவி' மற்றும் ரோந்து போலீசார் போன்ற பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எது நடந்தாலும், பெண்கள் துணிந்து வெளியே சொல்ல முன்வர வேண்டும்.

-வீ.லதா, 42,

கல்லுாரி விரிவுரையாளர், வேப்பம்பட்டு.

பொதுவாக இரவு 10:00 மணிக்கு மேல், முக்கிய சாலைகளில், முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தினால், பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே 'டாஸ்மாக்' கடை உள்ளது. அங்கு, இரவு 8:00 மணிக்கு மேல் போதை ஆசாமிகள் கூட்டமாக நிற்கின்றனர். இதனால், அங்கு போலீசாரை நிறுத்தினால், பெண்கள் பாதுகாப்பாக உணருவார்கள்.

- மீனா, செம்பாக்கம்.

சமூக ஆர்வலர், ஆவடி

சம்பவத்தை திசைதிருப்ப முயற்சி
சின்னி திலங்க் மற்றும் அவரின் தோழியர் சென்ற கார், வாலிபர்கள் சென்ற கார் மீது உரசி விட்டதாகவும், இதனால், பெண்கள் சென்ற காரை, வாலிபர்கள் இரண்டு கார்களில் துரத்திச் சென்றதாகவும் காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலில் உண்மை இல்லை என்றும், சம்பவத்தை திசை திருப்ப முயற்சி நடப்பதாகவும் பெண்கள் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.



தாம்பரம் கமிஷனர்

அலுவலகம் விளக்கம்'கடந்த, 26ம் தேதி, சின்னி திலங்க் என்ற பெண், கானத்துார் காவல் நிலையத்தில், 25ம் தேதி அதிகாலை 2:00 மணியளவில், காரில் முட்டுக்காடு பாலம் அருகே சென்றபோது, இரண்டு கார்களில், 7 - 8 வாலிபர்கள் திடீரென வழிமறித்ததாக புகார் அளித்துள்ளார். 'அவர் அளித்த புகாரின்படி, வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நடக்கிறது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், அவர்கள் பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்யவும், ஈ.சி.ஆர்., சாலையில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து புலன் விசாரணை செய்ய, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது' என, தாம்பரம் கமிஷனர் அலுவலகம் சார்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



அரசியல் தலைவர்கள் கண்டனம்

கிழக்கு கடற்கரை சாலை சம்பவத்திற்கு, பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விபரம்:* அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், காரில் சென்ற பெண்களை, தி.மு.க., கொடி கட்டிய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும், கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். இந்த காட்சி, நெஞ்சை பதைக்க வைக்கிறது.அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை, வீடு வரை அந்த கயவர்கள் துரத்தி வந்துள்ளனர். வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால், அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால், 'இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச் சொன்னது?' என்று காவல் துறையினர் கேட்டதாகவும், பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர்.பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட, தி.மு.க., ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள, தி.மு.க., கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா?குற்றம் செய்பவர்கள் தி.மு.க.,வினர் என்றால், காவல் துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்து தான் செயல்படுமா? யார்அந்த சார் என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த முதல்வர் ஸ்டாலின், இந்த சார்கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்?தமிழகத்தின் பிரதான கிழக்கு கடற்கரை சாலையில், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள தி.மு.க., அரசை கண்டிக்கிறேன். இந்த வழக்கில், நேர்மையாக முதல் தகவல் அறிக்கை பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் கசியாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல், இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.* அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:தி.மு.க., கொடி கட்டிய காரில் வந்த மது போதை கும்பல், இளம்பெண்ணிடம் ரகளை செய்யும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் போதை பொருட்கள் கடத்தலில் துவங்கி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வரை, தி.மு.க.,வினருக்கும், தி.மு.க., அனுதாபிகளுக்கும் தொடர்பில்லாமல் நடக்க வாய்ப்பில்லை என்று சொல்லும் அளவிற்கு, அவர்கள் தொடர்புடைய குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் காவல் துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.* பா.ம.க., தலைவர் அன்புமணி: சென்னை புறநகரின் மிக முக்கியமான சாலையில் பயணிக்கும் பெண்களை வழிமறித்து, தொல்லை கொடுக்கும் அளவுக்கு, சமூக விரோதிகளுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது, அச்சமும் கவலையும் அளிக்கிறது. காவல் துறையில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டிய காவல் துறையினரே, குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது, காரில் வந்தவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.



இப்போது ஏன்

வெளியே வருகிறீர்கள்?வாலிபர்களின் அட்டகாசம் குறித்து, சம்பந்தப்பட்ட பெண்கள், போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய சென்றபோது, கானத்துார் போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார், உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்காமல், 'இப்போது ஏன் வெளியே வருகிறீர்கள்?' என, கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.








      Dinamalar
      Follow us