இந்தியர்களின் நலனை உறுதி செய்யவிரைவில் யு.ஏ.இ., உடன் ஒப்பந்தம்
இந்தியர்களின் நலனை உறுதி செய்யவிரைவில் யு.ஏ.இ., உடன் ஒப்பந்தம்
ADDED : செப் 13, 2011 11:53 PM
துபாய்: ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரியும், இந்தியர்களின் பல்வேறு நலன்களை உறுதி செய்யும் வகையிலான ஒப்பந்தம் ஒன்று, விரைவில் கையெழுத்தாக உள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளின் தொழிலாளர் துறை அமைச்சர் சக்ர் கோபாஷ் சயீத் கோபாஷ், நான்கு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
அவரது இந்தப் பயணத்தின் போது, ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்குப் பல்வேறு நலன்களை அளிக்க வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று, கையெழுத்தாக உள்ளதாக, ஐக்கிய அரபு நாடுகளுக்கான இந்தியத் தூதர் எம்.கே.லோகேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,'இந்த ஒப்பந்தம் இந்தியர்களின் நலன்களை உறுதி செய்யும். இந்தியர்களைப் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்வது மற்றும் இந்தியர்களின் ஒட்டு மொத்த நலன்களை உறுதி செய்வது ஆகியவற்றில், இருதரப்பு ஒத்துழைப்பையும் இந்த ஒப்பந்தம் மேம்படுத்தும்' என்றார்.ஐக்கிய அரபு நாடுகளில், வேலைதேடும் திறன் மற்றும் திறன் வாய்க்காத தொழிலாளர்களின் ஆவணங்களுக்கு, இணையம் வழி அங்கீகாரம் அளிப்பது குறித்து, கோபாஷ் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி இருவரும் கலந்தாலோசிக்க உள்ளனர்.
இதன் மூலம், ஒரே வகையான ஆவணங்களையே இருதரப்பிலும் தொழிலாளர்கள் சமர்ப்பிக்க முடியும். மேலும், ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரியும், இந்தியர்களைப் பற்றிய தகவல் மையமாகவும் அது இருக்கும். வேலை ஒப்பந்தங்களில் நிகழும் முறைகேடுகளையும் இத்திட்டம் தடுக்கும்.தனது நான்கு நாள் பயணத்தில் கோபாஷ், ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி மற்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி இருவரையும் சந்திக்க உள்ளார்.