பழங்குடியினருக்கு பாடம் கற்பிக்க சிறுவர்களை கடத்திய தலிபான்கள்
பழங்குடியினருக்கு பாடம் கற்பிக்க சிறுவர்களை கடத்திய தலிபான்கள்
ADDED : செப் 04, 2011 01:36 AM

பெஷாவர்: 'பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில், அந்நாட்டு ராணுவத்தை ஆதரிக்கும் பழங்குடியினருக்கு, பாடம் கற்பிக்கவே, 25 சிறுவர்களைக் கடத்தினோம்' என பாகிஸ்தானி தலிபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் மேற்கில் உள்ள, பஜாவுர் பழங்குடியினப் பகுதியில், நேற்று முன்தினம், 60 சிறுவர்கள் 'ஈத்' பண்டிகையையொட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.
விளையாட்டின் போது, அவர்கள் வழி தவறி ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் சென்றனர்.ஐந்து வாகனங்களில் அங்கு வந்த பயங்கரவாதிகள், அவர்களைக் கடத்திச் சென்று, பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.இந்நிலையில், நேற்று பாகிஸ்தானி தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர், எசனுல்லா எசன் வெளியிட்ட அறிக்கையில்,'எங்களுக்கு எதிராக, பழங்குடியினத் தலைவர்கள் பாகிஸ்தான் ராணுவத்துக்கு உதவுகின்றனர். அவர்களுக்குப் பாடம் கற்பிக்கத்தான், 25 சிறுவர்களைக் கடத்திச் சென்றோம்' என்று கூறியுள்ளார்.