சீன குற்றச்சாட்டுக்கு வரவேற்பு: இருவர் சுட்டுக்கொலை
சீன குற்றச்சாட்டுக்கு வரவேற்பு: இருவர் சுட்டுக்கொலை
ADDED : ஆக 03, 2011 12:42 AM

பீஜிங்: சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில், சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலோடு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட இருவரை, அப்பகுதி போலீசார் நேற்று சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் மீதான, சீனாவின் குற்றச்சாட்டை சீனப் பத்திரிகைகள் வரவேற்றுள்ளன. சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில், சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 20 பேர் பலியாயினர். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்பட்ட இருவரை, தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களின் தலைக்கு, தலா ஏழு லட்ச ரூபாய் பரிசு அறிவித்திருந்தனர். இந்நிலையில், கஷ்கர் நகரத்தின் புறநகர்ப் பகுதியில், வயலில் ஒளிந்திருந்த இந்த இருவரையும், நேற்று போலீசார் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷின்ஜியாங் மாகாணத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தனர். சீன அரசு, 'ஹான்' இனத்தவரை, அங்கு தொடர்ந்து குடியேற்றி முஸ்லிம் பெரும்பான்மையைக் குறைத்தது. ஷின்ஜியாங் மாகாணம் சுயாட்சி பெறுவதற்காக, 'கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்' என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.'சமீபத்தில் நடந்த தாக்குதலில் அவர்கள்தான் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள, பயங்கரவாத அமைப்புகள் பயிற்சி அளித்துள்ளன' எனச் சீனா குற்றம்சாட்டியிருந்தது. சீனாவின் இந்தக் குற்றச்சாட்டை வரவேற்றுள்ள சீனப் பத்திரிகைகள், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும் என, சீன அரசுக்கு அறிவுரை கூறியுள்ளன.