ADDED : செப் 11, 2011 11:22 PM

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 2001ல் நிகழ்ந்த இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவத்தின் 10வது ஆண்டு நினைவு தினம், நேற்று அந்நாட்டில் அனுசரிக்கப்பட்டது.
நியூயார்க்கில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டார். இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் நினைவுதினத்தை முன்னிட்டு, வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 2001 செப்டம்பர் 11ம் தேதி, உலக வர்த்தக மையம் என்ற இரட்டைக் கட்டடங்கள் மீது, அல்-குவைதா பயங்கரவாதிகள், இருவிமானங்களை மோதி தாக்குதல் நிகழ்த்தினர்.இச்சம்பவத்தில் அக்கட்டடங்கள் இடிந்து மண்ணோடு மண்ணாயின. இதில், இந்தியர், பிரிட்டன் நாட்டவர், அமெரிக்கர் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, மொத்தம் 2,976 பேர் பலியாகினர். இதையடுத்து, பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில், அமெரிக்கா தீவிரமாக இறங்கியது.
வரலாறு காணாத பாதுகாப்பு:இரட்டைக் கோபுர தகர்ப்பின் 10வது ஆண்டு நினைவு தினம், நேற்று அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, தகவல்கள் கிடைத்ததால், நாடு முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடத்தில், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிச்சேல் ஒபாமா, முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், அவரது மனைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.பலியானவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கண்ணீர் சிந்திய புஷ்:கட்டடங்கள் இருந்த இடத்தில், அதிபர் ஒபாமா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின், அனைவரும் தலைகுனிந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஒபாமா, பைபளில் இருந்து சில வரிகளை வாசித்தார். அதைத் தொடர்ந்து, பலியான மூவாயிரம் பேரின் பெயர்களும் வாசிக்கப்பட்டன. அப்போது, முன்னாள் அதிபர் புஷ் கண்ணீர் சிந்தினார்.
பிரதிபலிக்கும் குளம்:இதையடுத்து, இரு கட்டடங்களில் வடபுறமாக நின்றிருந்த கட்டடம் இருந்த இடத்தில், ஒரு பிரதிபலிக்கும் குளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதை, அதிபர் ஒபாமா திறந்து வைத்தார். அதன் சுற்றுச் சுவர்களில், பலியானோரின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்சேல், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், அவரது மனைவி ஆகியோர் ஒருவரது கரத்தை மற்றவர் பற்றியபடி, அந்தக் குளத்தின் கரையில் நின்றபடி பலியானோருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பிற இடங்களில்...:பயங்கரவாதிகள் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவ மையமான, 'பென்டகன்' அலுவலகத்திலும், பென்சில்வேனியா மாகாணத்தின் ஷேங்க்ஸ்வில்லே என்ற இடத்திலும் நேற்று, அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன.அதேபோல், பிரிட்டன், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் ஆகிய இடங்களிலும், அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன.இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப் பின், அமெரிக்க அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளால், அந்நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல், கடந்த 10 ஆண்டுகளில் நடக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.