சிறையை உடைத்து தப்ப முயற்சி; காங்கோவில் 129 கைதிகள் உயிரிழப்பு
சிறையை உடைத்து தப்ப முயற்சி; காங்கோவில் 129 கைதிகள் உயிரிழப்பு
UPDATED : செப் 04, 2024 12:21 PM
ADDED : செப் 04, 2024 03:59 AM

கின்ஷாசா: காங்கோவில் உள்ள முக்கிய சிறையை உடைத்து கைதிகள் தப்ப முயன்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கைதிகள் உள்பட 129 பேர் உயிரிழந்தனர்.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவில் உள்ள முக்கிய சிறையான, மகலா மத்திய சிறையில் 1,500 கைதிகளை அடைக்க வசதி உள்ளது. ஆனால், 12,000க்கும் அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் விசாரணை கைதிகள். இந்நிலையில், கடந்த 1ம் தேதி நள்ளிரவு துவங்கி, நேற்று முன்தினம் காலை வரை இந்த சிறைக்குள் திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதால் பீதி ஏற்பட்டது.
சத்தம் கேட்டு பொதுமக்கள் சிறையின் முன் கூடினர். அப்போது சிறை சுவரில் துளையிட்டு கைதிகள் தப்ப முயன்றது தெரியவந்தது.
அவர்களை தடுக்கும் விதமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 24 கைதிகள் கொல்லப்பட்டனர். அப்போது சிதறியோடிய கைதிகள் கூட்ட நெரிசலில் சிக்கி சிறைக்குள்ளேயே விழுந்து இறந்தனர்.
இதனால் சிறை முழுதும் ரத்த காயங்களுடன் மனித உடல்களாக காட்சியளித்தன. இந்த சம்பவத்தில் மொத்தம் 129 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் இருவர் மட்டுமே சுட்டக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.