மீனவர்கள் கைது நடவடிக்கையில் இலங்கை கடற்படை வீரர் பலி
மீனவர்கள் கைது நடவடிக்கையில் இலங்கை கடற்படை வீரர் பலி
ADDED : ஜூன் 26, 2024 01:19 AM
கொழும்பு, எல்லை தாண்டி இந்திய மீனவர்களை கைது செய்யும் முயற்சியின்போது, இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
நமக்கும், நம் அண்டை நாடான இலங்கைக்கும் இடையே உள்ள மிகப் பெரிய பிரச்னை, மீனவர் பிரச்னையாகும்.
குறிப்பாக, தமிழகத்தையும், இலங்கையின் வட முனையை பிரிக்கும் பாக் ஜலசந்தி பகுதியில் மீன்வளம் அதிகம் உள்ளது.
இங்கு மீன் பிடிப்பதில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை உள்ளது.
இந்நிலையில், இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளை இலங்கை கடற்படை கடந்த சில தினங்களாக தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கு யாழ்ப்பாணத்துக்கு அருகே, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீன்பிடி படகை, இலங்கை கடற்படையினர் நேற்று சுற்றி வளைத்தனர். அதில் இருந்த, 10 மீனவர்களை கைது செய்தனர்.
இந்த நடவடிக்கையின்போது, மீன்பிடி படகில் இருந்த இரும்பு கம்பி, நெஞ்சில் குத்தியதில், இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.