14 ஆண்டு சட்ட போராட்டம் முடிந்தது விடுதலை செய்யப்பட்டார் அசாஞ்சே
14 ஆண்டு சட்ட போராட்டம் முடிந்தது விடுதலை செய்யப்பட்டார் அசாஞ்சே
UPDATED : ஜூன் 27, 2024 10:34 AM
ADDED : ஜூன் 27, 2024 02:34 AM

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது தொடர்பாக, 14 ஆண்டுகளாக நடந்த சட்டப் போராட்டங்களுக்குப் பின், 'விக்கிலீக்ஸ்' இணைய செய்தி நிறுவனத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் பிறந்த ஜூலியன் அசாஞ்சே, 2010ம் ஆண்டில், தன் விக்கிலீக்ஸ் என்ற இணைய செய்தி நிறுவனத்தில், அமெரிக்க ராணுவம் தொடர்பாக லட்சக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். இது, உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேச்சு சுதந்திரம்
அவர் மீது, உளவு பார்த்தது உட்பட, 18 குற்றப் பிரிவுகளின் கீழ் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார்.
அங்குள்ள ஈக்வடார் நாட்டின் துாதரகத்தில் அடைக்கலம் புகுந்தார். இதற்கிடையே, மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் அவருக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்குகள் தொடரப்பட்டன.
இதனால், ஏழு ஆண்டுகள் துாதரகத்துக்குள்ளேயே அவர் தங்கியிருந்தார். பின், அந்த வழக்குகள் கைவிடப்பட்டன.
கடந்த, 2019ல் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த, பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்தது.
ராணுவ ரகசியங்களை வெளியிட்டது குற்றம் என்று, அமெரிக்க அரசால் குற்றம் சாட்டப்பட்டாலும், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரத்துக்காக அவர் போராடியதாக பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சமரசம்
அவர் மீதான வழக்குகளில் இழுபறி நிலவி வந்த நிலையில், அவரை விடுதலை செய்ய, ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், அமெரிக்க அரசுடன் ஒரு சமரசம் ஏற்பட்டது. அதன்படி, அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் குற்றமற்றவர் என்று வாதிட முன்வந்தால், வழக்குகளில் இருந்து விடுவிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜூலியன் அசாஞ்சே, பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான வடக்கு மரியானா தீவில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
ராணுவ ரகசிய ஆவணங்களை வெளியிட்டதில் சதி உள்ளதா என்ற ஒரு பிரிவின் கீழ் மட்டும் அவர் மீது வழக்கு விசாரிக்கப்பட்டது. தான் குற்றமற்றவர் என்று அசாஞ்சே வாதாடினார்.
அவருக்கு, 62 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. லண்டன் சிறையில், 62 மாதங்கள் சிறையில் இருந்ததை கணக்கில் எடுத்துக் கொண்டு, அசாஞ்சேயை விடுவித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, 14 ஆண்டு சட்டப் போராட்டங்களில் இருந்து அசாஞ்சே மீண்டுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவின் கான்பராவுக்கு திரும்பினார். அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் ஆரத்தழுவி அசாஞ்சேவைவரவேற்றனர்.