'இன்ஸ்டா'வில் விவாகரத்து அறிவித்தார் துபாய் இளவரசி
'இன்ஸ்டா'வில் விவாகரத்து அறிவித்தார் துபாய் இளவரசி
UPDATED : ஜூலை 18, 2024 10:19 AM
ADDED : ஜூலை 18, 2024 12:49 AM

துபாய்: துபாய் ஆட்சியாளரின் மகள் ஷைக்கா மஹ்ரா, தன் கணவரை விவாகரத்து செய்துள்ளதாக, 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில் அறிவித்தது சர்ச்சை ஆகியுள்ளது.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயின் ஆட்சியாளராக ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உள்ளார். இவரது மகள் ஷைக்கா மஹ்ரா. பிரிட்டனில் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.
இவருக்கும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஷேக் மனா பின் முகமது என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், துபாய் இளவரசி மஹ்ரா, தன் கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அந்த பதிவில், 'அன்பிற்குரிய கணவரே, நீங்கள் பிறருடன் நேரம் செலவிட்டு வருவதால், நான் விவாகரத்தை அறிவிக்கிறேன். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி' என, குறிப்பிட்டுள்ளார்.
இளவரசி மஹ்ரா பொதுவெளியில் விவாகரத்தை அறிவித்தது துபாயில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மேலும், சமூக வலைதளங்களில் இருவரும் சேர்ந்தார் போல் பதிவிட்டிருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளனர். ஒருவரை ஒருவர் பிளாக் செய்துஉள்ளனர்.