சீனாவை புரட்டி போட்ட சூறாவளி வீடுகள் சேதம்; விமான சேவை பாதிப்பு
சீனாவை புரட்டி போட்ட சூறாவளி வீடுகள் சேதம்; விமான சேவை பாதிப்பு
ADDED : செப் 08, 2024 02:31 AM

பீஜிங், சீனாவின் ஹைனான் தீவில் சக்தி வாய்ந்த சூறாவளி புயல் தாக்கியதை அடுத்து, ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதனால், 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
நம் அண்டை நாடான சீனாவில் ஹைனான் தீவுப்பகுதியை சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று முன்தினம் தாக்கியது. இதற்கு, 'யாகி' என பெயரிடப்பட்டிருந்தது.
ஹைனான் தீவில் வென்சாங் நகரை நோக்கி, மணிக்கு 245 கி.மீ., வேகத்தில் இந்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக, அங்குள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களையும் இப்புயல் புரட்டிப் போட்டது. இதன் காரணமாக, அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியே இருளில் மூழ்கியது.
இதைத்தொடர்ந்து ஹைனான் தீவை ஒட்டியுள்ள குவாங்டாங் மாகாணத்தையும் இந்தச் சூறாவளி தாக்கியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு வசித்த 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கனமழை மற்றும் சூறைக்காற்று வீசியதில், இரண்டு பேர் பலியாகினர்; 92 பேர் காயமடைந்தனர்.
இதேபோல், ஹைனான் தீவில் உள்ள மூன்று விமான நிலையங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. இதனால், 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
ஹைனான் தீவு மற்றும் குவாங்டாங் மாகாணத்தை கடந்த யாகி சூறாவளி, குவாங்ஜி ஜுவாங்க் மற்றும் வடக்கு வியட்நாம் கடற்பகுதிக்கு இடையே இன்று கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.