ADDED : ஆக 15, 2024 02:31 AM

கொழும்பு,:இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்கள் நேற்று விமானம் வாயிலாக திருப்பி அனுப்பப்பட்டனர்.
தமிழகத்தின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் மன்னார் இடையேயான பாக் ஜலசந்தி மீன் வளம் நிறைந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் தென் தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மீன் பிடிக்கின்றனர். அவர்களில் சிலர் அவ்வப்போது எல்லை தாண்டி இலங்கை பகுதிக்கு சென்று மீன் பிடிப்பதாக கைது செய்யப்படுகின்றனர்.
ஆக., 1ல் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்களின் படகை இலங்கை கடற்படை கைப்பற்ற முயன்றது. அப்போது மீன்பிடி படகு மீது கடற்படை படகு மோதியதில், ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் பலியானார். ஒருவர் மாயமானார். இது இந்திய - இலங்கை இருதரப்பு உறவில் சர்ச்சையானது.
இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.