வரி உயர்வு திட்டத்துக்கு எதிர்ப்பு; கென்யா பார்லி.,க்கு தீ வைப்பு
வரி உயர்வு திட்டத்துக்கு எதிர்ப்பு; கென்யா பார்லி.,க்கு தீ வைப்பு
ADDED : ஜூன் 25, 2024 11:25 PM

நைரோபி, :வரிகளை உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கோரி, கென்யாவில் நடந்து வரும் போராட்டம் நேற்று தீவிரமடைந்தது. ஆயிரக்கணகான மக்கள், அந்த நாட்டின் பார்லிமென்ட் கட்டடத்தை முற்றுகையிட்டு, அதன் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 10 பேர் பலியாகினர்.
ஆப்ரிக்க நாடான கென்யா கடும் நிதி நெருக்கடியில் உள்ளது; வெளிநாட்டு கடனும் உச்சத்தில் உள்ளது. இதையடுத்து, வரிகளை உயர்த்த அதிபர் வில்லியம் ரூடோ தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, குறிப்பிட்ட சில பொருட்களுக்கான வரி உயர்வை கைவிடுவதாக அரசு தெரிவித்தது. ஆனால், ஒட்டுமொத்தமாக வரி உயர்வு திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பிரச்னை தொடர்பாக, பார்லிமென்டில் நேற்று விவாதம் நடந்தது. அந்த நேரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பார்லிமென்டை முற்றுகையிட்டனர். அங்கிருந்த தடுப்புகளை உடைத்து, அவர்கள் முன்னேறினர்.
இதை தடுப்பதற்காக, கென்யா போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால், உயிரிழப்பு அதிகம் இருக்கலாம் என தெரிகிறது. இதற்கிடையே, போராட்டக்காரர்கள், பார்லிமென்ட் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.
இந்தப் போராட்டத்தால், தலைநகர் நைரோபியில், உள்ள பார்லிமென்ட் வளாகம் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.