புலம்பெயர் தமிழர்களிடம் மோசடி பிரபாகரன் சகோதரர் குற்றச்சாட்டு
புலம்பெயர் தமிழர்களிடம் மோசடி பிரபாகரன் சகோதரர் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 07, 2024 01:45 AM
கொழும்பு, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருடன் இருப்பதாக கூறி, புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி நடப்பதாக, பிரபாகரனின் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கையில் தனி நாடு கேட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர்.
அதன் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர், 2009ல் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இருப்பினும், பிரபாகரன் உள்ளிட்டோர் உயிருடன் இருப்பதாக அவ்வப்போது தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரர் மனோகரன், அதை மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் அவர் முதன்முறையாக வாய் திறந்ததை அடுத்து, மனோகரனின் பேட்டியை இலங்கை ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
இலங்கையில் 2009ல் நடந்த இறுதிப்போரில் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இறந்தனர்.
இந்த உண்மையை ஒப்புக்கொள்வது அவசியம். ஆனால், அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதாக தகவல்கள் பரப்பப்படுகின்றன. பிரபாகரனின் சகோதரன் என்ற முறையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது என் கடமை.
இளம்பெண் ஒருவர், தான் பிரபாகரனின் மகள் துவாரகா எனக்கூறி, இலங்கையில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பிரபாகரனும், அவரது குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்தது உண்மை. எனவே, இந்த விவகாரத்தில் மோசடி பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.