ADDED : செப் 08, 2024 12:45 AM
கீவ்,
'டிராகன் ட்ரோன்' எனப்படும் புதுவித ஆளில்லா விமானத்தை ரஷ்யாவின் ராணுவ நிலைகள் மீது ஏவி, உக்ரைன் ராணுவம் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
ரஷ்யா- - உக்ரைன் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டியும் தொடர்கிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் ராணுவம் நேற்று, ரஷ்யா கைப்பற்றியுள்ள கார்கிவ் பகுதியில் உள்ள ரஷ்யாவின் ராணுவ நிலைகள் மீது டிராகன் ட்ரோன் உதவியுடன் தாக்குதல் நடத்தியது.
'டிராகன் ட்ரோன்' என்பது சாதாரண ஆளில்லா விமானம் தான். ஆனால் அதில் டெர்மைட் எனும் வேதிப்பொருள் நிரப்பட்டு இருக்கும். இது அலுமினியம் பவுடர் மற்றும் இரும்பு ஆக்சைடின் கலவை.
இந்த டெர்மைட் 2,500 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை வெளியிடும் என்பதால், இது பட்டவுடன் இரும்பு போன்ற கடின உலோகமே உருகும். அதனால் இந்த வேதிப்பொருளை தாங்கிச் செல்லும் ட்ரோனுக்கு டிராகன் ட்ரோன் என்று பெயரிட்டுள்ளனர்.
கடந்த 1890ல் ரயில் தண்டவாளங்களை வெல்டிங் வைப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட டெர்மைட், முதல் உலகப் போரில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்த டெர்மைட்டை உக்ரைன் ராணுவம், ட்ரோன் வாயிலாக ரஷ்யாவின் ராணுவ நிலைகள் மீது வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பகுதியில் இருந்த ராணுவ தளவாடங்கள் எரிந்து சாம்பலாகின.