ADDED : செப் 04, 2024 11:29 AM
உலன்பாதர்: ரஷ்யாவுக்கும், அதன் அண்டை நாடான -உக்ரைனுக்கும் இடையே, இரண்டாண்டுகளுக்கு மேல் போர் நடக்கிறது. இந்த போர் தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில், புடின் மீது கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு, புடின் பயணம் மேற்கொண்டால், அந்த நாடு அவரை கைது செய்யும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள, கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவுக்கு, அரசு முறை பயணமாக, ரஷ்ய அதிபர் புடின் நேற்று சென்றார்.
அவரை, அந்நாட்டு அதிபர் உக்னாகின் குரெல்சுக் நேரில் சென்று வரவேற்றார்.
அதன்பின், இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே, ரஷ்ய அதிபர் புடினை சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி, மங்கோலியாவை உக்ரைன் வற்புறுத்தியது. இதை மங்கோலியா கண்டுகொள்ளவில்லை.