டெலிகிராம் நிறுவனர் கைது 'போட்டு கொடுத்த' பெண் மாயம்
டெலிகிராம் நிறுவனர் கைது 'போட்டு கொடுத்த' பெண் மாயம்
ADDED : ஆக 28, 2024 07:53 AM

பாரிஸ் : 'டெலிகிராம்' செயலி நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியான பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டதற்கு, அவருடன் சென்ற மர்ம பெண் காரணம் என்று கூறப்படுகிறது.
பணப்பரிமாற்ற மோசடி, போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாக, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான அசர்பைஜானில் இருந்து பிரான்சின் பாரிஸ் விமான நிலையம் வந்திறங்கிய டெலிகிராம் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், 39, கடந்த 24ல் கைது செய்யப்பட்டார். ரஷ்யாவைச் சேர்ந்தவரான துரோவ், பிரான்ஸ் குடியுரிமையும் பெற்றுள்ளார்.
இவர் கைது செய்யப்பட்டதற்கு, அவருடன் பயணம் செய்த, 24 வயதான ஜூலி வாவிலோகா என்ற பெண் காரணம் எனக் கூறப்படுகிறது. கிரிப்டோ எனப்படும் மெய்நிகர் நாணய முதலீட்டு நிபுணரான இவர், ஆன்லைனில் வீடியோ கேம்களையும் வெளியிட்டு வந்துள்ளார்.
இவர் தன் சமூக வலைதள கணக்கில், பாவெல் துரோவ் உடன் அஜர்பைஜானுக்கு பயணம் சென்றது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும், பாரிஸ் செல்வது தொடர்பான தகவல்களையும் வெளியிட்டுள்ளார். இதனடிப்படையிலேயே, பாவெல் துரோவ், பாரிசில் இறங்கியபோது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டதில் இருந்து ஜூலி வாவிலோகா குறித்து எந்தத் தகவலும் இல்லை. அவருடைய சமூக வலைதளத்திலும் எந்தப் பதிவுகளும் வெளியாகவில்லை. இதனால், ஜூலி வாயிலாக ஆசைகாட்டி, பாவெல் துரோவ் பாரிசுக்கு வரவழைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால், இவர்களுக்கு இடையே உள்ள நட்பு தொடர்பாக எந்தத் தகவலும் ஜூலி வாவிலோகாவின் சமூக தளத்தில் இடம்பெறவில்லை.
இருவரும் டெலிகிராமின் தலைமையகம் அமைந்துள்ள துபாயில் வசித்துள்ளனர் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது. அந்த மர்ம பெண் திடீரென மாயமாகி உள்ளது புதிய மர்மத்தை உருவாக்கியுள்ளது.