ADDED : பிப் 23, 2025 11:39 PM
பாரிஸ்: பிரான்சின் முல்ஹோஸ் பகுதியில் ஒருவர் நடத்திய சரமாரி கத்திக்குத்தில், ஒருவர் உயிரிழந்தார்; இரண்டு போலீசார் படுகாயமடைந்தனர். இதை, முஸ்லிம் பயங்கரவாத தாக்குதல் என, அந்த நாட்டின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரான்சின் கிழக்கே உள்ள முல்ஹோஸ் பகுதியில், பேரணி ஒன்று நேற்று நடந்தது. அப்போது அங்கு வந்த ஒருவர், கண்ணில் பட்டவர்கள் மீது கத்தியால் குத்தி திடீரென தாக்குதல் நடத்தினார்.
இதில், போர்ச்சுகீசைச் சேர்ந்த, 69 வயது முதியவர் உயிரிழந்தார். இரண்டு போலீசார் படுகாயமடைந்தனர். இதைத் தவிர, மேலும் மூன்று போலீசார் காயமடைந்தனர்.
முஸ்லிம் மத கோஷமிட்டபடி, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை நடத்தியதாக, அல்ஜீரியாவை சேர்ந்த 37 வயது நபர் கைது செய்யப்பட்டார். இவர், பயங்கரவாத தடுப்புப் போலீசாரின் கண்காணிப்பில் இருந்தவர் என்று கூறப்படுகிறது.
“இது முஸ்லிம் பயங்கரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமில்லை. பயங்கரவாதத்தை எந்த வடிவிலும் ஏற்க மாட்டோம்,” என, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கூறியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

