கமலாவுக்கு எதிரி துளசி: கைகோர்த்து களம் இறங்கிய டிரம்ப்!
கமலாவுக்கு எதிரி துளசி: கைகோர்த்து களம் இறங்கிய டிரம்ப்!
UPDATED : ஆக 17, 2024 02:02 PM
ADDED : ஆக 17, 2024 01:55 PM

வாஷிங்டன்: கமலா ஹாரிஸ் உடனான விவாதத்தில் சிறப்பாக செயல்பட தயாராகி வரும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் , ஜனநாயக கட்சி முன்னாள் தலைவர் துளசி கபார்டின் உதவியை நாடியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடக்க உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விலகியதால், ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் களம் இறங்குகிறார். போட்டியிடும் வேட்பாளர்கள் தனியார் செய்தி நிறுவனங்கள் நடத்தும் நேருக்கு நேர் விவாதங்களில் பங்கேற்பர்.
செப்.,10ல் விவாதம்
வரும் செப்டம்பர் 10ம் தேதி ஏபிசி செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள விவாத நிகழ்ச்சியில் டிரம்பும், கமலாவும் பங்கேற்க உள்ளனர். விவாதத்தில் எப்படியாவது கமலாவை வீழ்த்தி விட வேண்டும் என டிரம்ப் பல்வேறு முயற்சி செய்து வருகிறார்.
யார் இந்த துளசி?
கடந்த 2020ல் நடந்த விவாதத்தில் கமலாவை தோற்கடித்தவர், அவரது கட்சியை சேர்ந்த துளசி கபார்டு. ஜனநாயகக் கட்சியில் முக்கிய புள்ளியாக இருந்தவர் துளசி. ஹவாய் மாவட்டத்தின் அரசு பிரதிநிதியாக இருந்தவர். இவரும் 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார்.
இதற்கென உட்கட்சி தேர்தல் 2019ல் நடந்தபோது, களத்தில் இருந்த கமலா ஹாரிசுக்கும் துளசிக்கும் விவாதம் நடந்தது. இதில் கமலாவை விட சிறப்பாக செயல்பட்ட துளசி, விவாதத்தில் வெற்றி பெற்றாார். அப்போது முதல் கமலாவுக்கும், துளசிக்கும் வெளியில் சொல்ல முடியாத பகை உள்ளது. தற்போது கமலா ஹாரிஸ் துணை அதிபராகி, அதிபர் தேர்தல் களம் வரை வந்து விட்டார்.
துளசியின் உதவியை நாடிய டிரம்ப்
ஆனால், துளசியோ, ஜனநாயக கட்சியில் இருந்து 2022ல் வெளியேறி விட்டார். வீட்டில் சும்மா இருந்தவரை, தனக்கு ஒத்தாசையாக தேர்தல் வேலை பார்க்கும்படி கோரியுள்ளார் டிரம்ப். அவரிடம் விவாதத்தின் போது சிறப்பாக செயல்படுவது குறித்து டிரம்ப் பயிற்சி பெற்று வருகிறார்.
நிரூபணம்
டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: அரசியல் வரலாற்றில் சிறந்த விவாதம் செய்பவர்களில் ஒருவராக டிரம்ப் நிரூபிக்கப்பட்டுள்ளார். இது ஜோ பைடன் உடனான விவாதம் மூலம் நிரூபணம் ஆனது. அவருக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. ஆனால் துளசி கபார்டை இந்த தேர்தல் விவாதத்துக்காக சந்தித்து பேசி தயாராகி வருவது உண்மை தான் என்றார்.

