அதிபரின் கருணை திட்டத்தில் 1,000 கைதிகள் விடுவிப்பு
அதிபரின் கருணை திட்டத்தில் 1,000 கைதிகள் விடுவிப்பு
UPDATED : ஆக 03, 2025 06:11 AM
ADDED : ஆக 03, 2025 02:16 AM

ஜகார்த்தா: இந்தோனேஷியா அதிபரின் கருணைத் திட்டத்தின் கீழ் 1,000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்கும் பணி துவங்கியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் தலைமையிலான இந்தோனேஷிய இயக்கக் கட்சியின் ஆட்சி நடக்கிறது.
இந்த நாட்டு சிறைகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு அக்டோபரில் பதவியேற்ற சுபியாந்தோ, 44,000 கைதிகளை கருணை அடிப்படையில் விடுவிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
முந்தைய அதிபர்கள் பொது மன்னிப்பு அதிகாரத்தை அரிதாகவே பயன்படுத்தினர். அந்நாட்டு சபாநாயகர், சட்ட அமைச்சர், பிற கட்சித் தலைவர்களுடன் சுபியாந்தோ நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, கருணை அடிப்படையில் சிறைக் கைதிகளை விடுவிக்கும் உத்தரவு வெளியானது.
முதற்கட்டமாக, 1,116 கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டனர். இதில், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர். அடுத்த சில நாட்களில், 1,668 கைதிகள் இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளனர்.